சாணத்திலிருந்து ஒரு தெய்வம் பிறந்ததாம். படிக்கும்போதே குமட்டிக் கொண்டு வருகிறது. சாணத்திலிருந்து பிறந்ததாகப் பெருமையோடு ஒருவருக்கொருவர் சாணியால் அடித்துக் கொள்வார்களாம். (இது கருநாடகாவில் நடந்தது).
இந்தக் கேவல நிகழ்ச்சியை காட்சிப் பதிவு எடுத்து, யூடியூபர்கள் வெளியிட்டு விட்டார்களாம்!
இதனால் மானம் போய்விட்டதாம்! அடேயப்பா, கோபம் பொத்துக்கொண்டு விட்டதாம்… சாணியில் கடவுள் பிறந்தது என்று சொல்லுவதும், அதை வைத்து ஒருவருக்கொருவர் சாணியால் அடித்துக் கொண்டதும் மானக்கேடு– காட்டுவிலங்காண்டித்தனம் இல்லையாம்! அதை காட்சிப்பதிவு எடுத்து வெளியிட்டதுதான் மாபெரும் குற்றமாம்!
எப்படி இருக்கிறது?
அப்படி என்றால், கோபப்படும் இந்தப் பக்தர்களுக்கே நன்றாகவே தெரிந்துவிட்டது – செய்த காரியம் அசிங்கம் – அநாகரிகம் என்று.
தெரிந்த பிறகு, இனிமேல் இதுபோன்ற அருவருக்கத்தக்க காரியத்தைப் பக்தியின் பெயரால் செய்யக் கூடாது என்று சிந்தித்தால், பரவாயில்லை, பக்தர்களுக்கும் கொஞ்சம் புத்தி வந்தது என்று எடுத்துக் கொள்ளலாம்!
அப்படி எல்லாம் செய்யாமல், அந்த அநாகரிகக் காரியத்தை வெளியில் கொண்டு வந்த யூடியூபர் மீது பாய்வது – காய்வது எந்த வகையில் சரி!
ஓ, ‘பக்தி வந்தால் புத்தி போகும்!’ என்று தந்தை பெரியார் கூறியதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.
பஞ்ச கவ்யம் என்று கூறி, மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய்யை ஒரு கலக்குக் கலக்கி, தட்சணையும் கொடுத்து, மூக்கைப் பிடித்துக்கொண்டு பயபக்தியாகக் குடிப்பவர்களாயிற்றே!
சேலம் அன்னதானப்பட்டியில் கோவில் திருவிழா என்று சொல்லி, துடைப்பத்தால் – அதாவது விளக்கமாற்றால் அடிக்கும் கேவலம் இன்னும் நடந்துகொண்டுதானே இருக்கிறது!
கடவுளும், மதமும், சடங்குகளும், எந்த அளவுக்கு மனிதப் புத்தியை நாசப்படுத்தியிருக்கின்றன பார்த்தீர்களா?
பார்ப்பானைவிட நம் மக்களுக்குப் பக்தி அதிகமோ? எந்தப் பார்ப்பான் சாணியால் அடித்துக் கொள்கிறான்? எந்தப் பார்ப்பான் மாட்டு மூத்திரம், சாணி கலந்த பஞ்சகவ்யத்தைக் குடிக்கிறான்? எந்தப் பார்ப்பான் துடைப்பத்தால் அடி வாங்குகிறான்?
சிந்திப்பீர்!
– மயிலாடன்
