செங்கல்பட்டு, அக். 26- நெல்லுக்கான ஈரப்பத அளவை நிர்ணயிக்க ஒன்றியக்குழு தமிழ்நாட்டில் நேற்று (25.10.2025) பல இடங்களில் நேரில் ஆய்வு செய்தது.
ஒன்றியக்குழு வருகை
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளிடம் இருந்து அரசு நெல் கொள்முதல் செய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்கவேண்டும் என்று தமிழ்நாடுஅரசு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
இதன் அடிப்படையில் ஒன்றிய அரசு தலா 3 அதிகாரிகளை கொண்ட 3குழுக்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழுக்கள் நேற்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று அதிரடியாக ஆய்வு செய்தது.
செங்கல்பட்டு
இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உதவி இயக்குநர் ப்ரீத்தி, தொழில்நுட்ப அலுவலர் பிரியா பாட், அனுபமா அடங்கிய ஒன்றியக்குழு நேற்று வந்தது. இந்த குழு திருப்போரூர் வட்டம் ஒரகடம், மதுராந்தகம் வட்டம் படாளம் மற்றும் எல்.என்.புரம், காட்டாங்கொளத்தூர் வட்டம் வில்லியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தது.அப்போது நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதை கண்டறிந்தது. இதே போல் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம் மற்றும் ஓரகடம் பகுதியில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒன்றியக்குழு ஆய்வு குழு அதிகாரிகளான ஷாகி, ராகுல் சர்மா, தனுஜ் சர்மா ஆகியோர் ஆய்வு செய் தனர். மதுராந்தகத்திலும் ஆய்வுக் குழு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சினேகா, முதுநிலை மேலாளர் (தர கட்டுப்பாடு) உமா மகேஸ்வரி, முதுநிலை மண்டல மேலாளர் மாரியப்பன், இணை இயக்குநர் (வேளாண்மை) பிரேம் சாந்தி, உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
நாமக்கல்
இதேபோல் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆலையில் மற்றொரு ஒன்றியக்குழு நேற்று திடீரென ஆய்வு செய்தது.
அதாவது நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள நவனி தோட்டக்கூர் பட்டி ஊராட்சி, புளியம்பட்டியில் தனியார் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சத்துமாவு மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்கிருந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் பொது வினியோக திட்டத்திற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 கார்களில் ஒன்றியக்குழுவினர் திடீரென அரிசி ஆலைக்கு வந்தனர். இதில் 3 பேர் கொண்ட ஒன்றியக்குழு அதிகாரிகள், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் 4 பேர் அடங்குவர்.
இந்த ஆய்வு மாலை 4.30 மணி வரை நீடித்தது. பின்னர் அவர்கள் ஆய்வை முடித்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
மாதிரிகள் சேகரிப்பு
செறிவூட்டப்பட்ட அரிசி யின் தரம், இருப்பு, கொள் முதல் நிலை குறித்து அதிகா ரிகள் ஆய்வு நடத்தியதாக தெரிகிறது.
இந்த ஆய்வு குறித்து ஆலை நிர்வாகத்தினர் மற் றும் காவல்துறை வட்டாரத் தில் கூறுகையில், துணை இயக்குநர் சாகி தலைமை யில் ஒன்றியக்
குழுவினர் 3 பேரும், தமிழ்நாடுநுகர்பொ ருள் வாணிப கழக அதிகா ரிகள் 4 பேரும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆலையில் இருந்து மாதிரிகளை ஆய்விற்காக அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.
மேலும் இருப்பு மற்றும் கொள்முதல் விவரங்களை கேட்டறிந்தனர். இது வழக்கமான ஆய்வுதான் என்றனர். கோவை மாவட்டம் ஊத்துப்பாளையத்தில் தனியார் அரிசி ஆலையிலும் ஒன்றியக்குழு ஆய்வு செய்தது.
விவசாயிகள் ஏமாற்றம்
தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங், தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா ஆகியோர் கொண்ட ஒன்றியக்குழுவினர் நேற்று (25.10.2025) ஆய்வு செய்வதாகவும், இன்று (26.10.2025) நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் ஆய்வு செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த குழுவினர் தஞ்சையை அடுத்த புதுவண்ணை, பொன்னாப்பர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ராராமுத்திரக் கோட்டை ஆகிய இடங்களில் ஆய்வு செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றிய குழுவினரிடம் தங்களின் வேதனையை தெரிவிக்க விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் நிர்வாக காரணங்களால் ஒன்றிய குழுவின் ஆய்வுப்பணி திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
