காபூல், அக்.26- பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க குனார் நதியில் புதிய அணை கட்டப்படும் என்று ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் சுமார் 2,640 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. எல்லைப் பிரச்சினை காரணமாக அண்மை காலமாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. கத்தார் நாட்டின் சமரசத்தின்பேரில் கடந்த 19ஆம் தேதி சண்டை நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. எனினும் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் குனார் நதி பாய்கிறது. இந்த நதியின் நீளம் 480 கி.மீ. ஆகும். நதியின் சுமார் 70 சதவீத தண்ணீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. இதை தடுக்க குனார் நதியில் புதிய அணையை கட்ட ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் நீர்வளத் துறை அமைச்சர் முல்லா அப்துல் லத்தீப் மன்சூர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “குனார் நதியில் புதிய அணை கட்டப்படும். இந்த நதியின் மீது ஆப்கானிஸ்தான் மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நீர்வளம், எரிசக்தி துறை செய்தித் தொடர்பாளர் மதியுல்லா அபித் கூறியதாவது: குனார் நதியில் புதிய அணையை கட்ட திட்டமிட்டு உள்ளோம். இதற்கான களஆய்வு நடத்தப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய அணையின் மூலம் ஆப்கானிஸ்தானில் 1,50,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் 45 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். இந்த அணையால் நாட்டின் உணவு தானிய உற்பத்தி, மின் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும்.
குனார் நதி தொடர்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. எனவே எவ்வித பிரச்சினையும் இன்றி நதியில் பிரம்மாண்ட அணையை கட்டுவோம். பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு மதியுல்லா அபித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆப்கான் அரசுவட்டாரங்கள் கூறுகையில்,
‘‘அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இதன்காரணமாக சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதே பாணியில் குனார் நதியில் புதிய அணையை கட்டி பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க உள்ளோம்’’ என்றன.
