பாட்னா, அக். 22- முதல் முறையாக வாக்களிக்கும் பீகார் கல்லூரி மாணவர்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் அரசை விரும்புவதாக தெரி வித்துள்ளனர்.
புதிய வாக்காளர்கள்
பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் நடக்கிறது. இதில், சுமார் 14 லட்சம் பேர், முதல்முறை வாக்காளர்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கல்லூரி மாணவர் களில் பெரும்பாலானோர் முதல்முறை வாக்காளர்கள் ஆவர்.
மேலும், 18 வயது முதல் 29 வயது வரையிலான இளம் வாக்காளர்கள் 1 கோடியே 63 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் மொத்த வாக்காளர்களில் 22 முதல் 25 சதவீதம் ஆவர்.
இந்நிலையில், எந்த மாதிரி யான அரசை விரும்புகிறார்கள் என்பது குறித்து கல்லூரி மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும் பாலானோர், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை தரும் அரசையே விரும்புவதாக தெரிவித்தனர்.
வேலைவாய்ப்பு
பாட்னா பல்கலைக்கழகத் தின் ஹிந்தி துறை முதுநிலை வகுப்பு மாணவர் அபினவ்குமார் சுக்லா, “தற்போதைய அரசின் மீதான நம்பிக்கை எங்களுக்கு முற்றிலும் போய்விட்டது. மாநிலத்தில் பரவலாக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண் டும்” என்று கூறினார்.
பாட்னா பல்கலைக்கழகத்தில் பார்வையற்றோருக்கான விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர் ரவீந்திரகுமார் சிங், ‘கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சிக்குத்தான் நான் வாக்களிப்பேன். அத்தகைய ஆட்சியில்தான் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் சிறப்பாக அமல்படுத்தப்படும்” என்று கூறினார்.
பிரசாந்த் கிஷோர்
மேனாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தனது ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால், வேலை தேடி பீகார் இளைஞர்கள் வெளிமாநிலம் செல்ல தேவையில்லாத நிலையை உருவாக்குவோம் என்று கூறியது கல்லூரி மாணவர்களை கவர்ந்துள்ளது.
உளவியல் துறையில் முதுநிலை வகுப்பு படிக்கும் மாணவர் கவுரவ் குமார் கூறியதாவது:-
கல்வியும், சுகாதாரமும் மோசமான நிலையில் உள்ளன. ஊழல் மலிந்துவிட்டது. இடம் பெயர்வு பெரிய பிரச்சினையாக உள்ளது. ராஷ்டிரீய ஜனதாதள ஆட்சியில் எங்கள் பகுதியான ஜெகனாபாத் மோசமாக பாதிக்கப்பட்டது. மீண்டும் அதுபோல் நிகழ நாங்கள் விரும்பவில்லை. பிரசாந்த் கிஷோர் இந்த பிரச்சினைகளை பேசுகிறார். நடைமுறைக்கு ஏற்ற வாக்குறுதிகளை அளிக்கிறார். அவரது வேட்பாளர்கள் தூய்மையானவர்கள். ஆனால் அவரது கட்சியின் வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வி, வேலைவாய்ப்பு
பாட்னா அறிவியல் கல்லூரி மாணவர் டி.கே.பிரதாப், “கல்வி, வேலைவாய்ப்பு, இடம்பெயர்வை கட்டுப்படுத்து தல் ஆகியவற்றில் நிதிஷ் குமார் அரசு தோல்வி அடைந்து விட்டது. இப்பிரச்சினைகளுக்கு இந்தியா கூட்டணி தீர்வு காணும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.
பாட்னா கல்லூரியில் புவியியல் படிக்கும் மாணவர் துருவ் குமார், “கல்வி முறையில், மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம்வரை அறியாமை நிலவுகிறது. வேட்பாளர்களின் தகுதிகளை ஒப்பிட்டு பார்த்து வாக்களிப்பேன்” என்று கூறினார்.
பாட்னா கல்லூரியின் மற்றொரு மாணவர், “தற்கால கல்வியின் தேவைகளை புரிந்து கொள்பவராகவும், புதிய சிந்தனை கொண்டவராகவும் உள்ள இளம் தலைவர் உருவெ டுக்க வேண்டும்” என்று கூறினார்.
அன்ஷாலி பதக் என்ற மாணவி, கல்வியின் அடித் தளத்தை வலுப்படுத்தும் அரசு வேண்டும். என்று தெரிவித்தார்.
