அய்தராபாத்: அக்.20- பெற்றோரைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை அவர்களின் பெற்றோருக்கு வழங்கப்படும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் தெரிவித்துள்ளார். புதிதாகத் தேர்வான குரூப் 2 பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிய பின் பேசிய முதலமைச்சர் ரேவந்த் “அரசு ஊழியர்கள் தங்களின் பெற்றோரைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால், அவர்களின் ஊதியத்தில் 10 முதல் 15 சதவீதம் வரையில் பிடித்தம் செய்யப்பட்டு பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன்மூலம் அரசு ஊழியர்களைப் போலவே அவர்களின் பெற்றோரும் மாதச் சம்பளத்தைப் பெறுவார்கள்” என்றார்.இந்த புதிய சட்டத்திற்கான மசோதாவைத் தயார் செய்ய ஒரு குழுவைத் தேர்வு செய்யுமாறு தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ண ராவை முதல்வர் ரேவந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
