புதுடில்லி, அக்.19- டில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் ஆர்எஸ்எஸ்-னுடைய மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு வெற்றி பெற்றது.
இந்நிலையில் மாணவர் யூனியனின் இணை செயலாளரான தீபிகா ஜா மற்றும் 2 ஏபிவிபி உறுப்பினர்கள் 17.10.2025 அன்று ஆசிரியர் ஒருவர் மீது காவல்துறையினர் முன்னிலையிலேயே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தீபிகா ஜா ஆசிரியரின் கன்னத்தில் அறையும் காட்சிப்பதிவு வைரலாகி வருகிறது. டில்லி பல்கலைக்கழகத்தில் வடக்கு வளாகத்தில் செயல்படும் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சுஜித் குமார் என்ற அந்த ஆசிரியர் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அண்மையில் கல்லூரி கவுன்சில் தேர்தலில் வென்ற தேசிய மாணவர் சங்க உறுப்பினரை ஏபிவிபி உறுப்பினர்கள் தாக்கியது குறித்து அலுவலக அறையில் காவல்துறையினர் முன்னிலையில் விசாரித்துக்கொண்டிருந்த போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் சக ஆசிரியர் மீதான தாக்குதலை கண்டித்து அம்மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த 14.10.2025 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஏபிவிபி தலைவர்கள் மூவர் மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக காட்சிப்பதிவு எடுத்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.