புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உதவித்தொகை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை அக்.17- ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நடப்பு 2025-2026ஆம் நிதி ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயன்கள் குறித்து உறுப்பினர்கள் பேசினர்.

இந்த விவாதத்துக்கு இடையே, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த 2023இல் அண்ணா பிறந்த நாளான செப்.15ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பெண்களின் பொருளா தார விடுதலைக்கு துணை நிற்கும் இந்த திட்டம் மூலம் சுமார் 1.14 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. கடந்த 26 மாதங்களில் ஒவ்வொருவருக்கும் ரூ.26 ஆயிரம் வீதம் ஒட்டுமொத்தமாக ரூ.30 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் அதிக பெண்கள் பயனடைய வேண்டும் என்று, சில விதிகளை முதலமைச்சர் தளர்த்தியுள்ளார். உதாரண மாக, அரசு மானியத்தில் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள், முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் விதிகளை பூர்த்தி செய்யும் பெண்களுக்கும் உரிமைத் தொகை சேர்த்து வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.

இதற்கிடையே, அரசு சேவைகள் மக்களைத் தேடி சென்றடையும் நோக்கிலான ‘உங்களு டன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலமாக, கிராமப்புறங்களில் 15 துறைகளின் வாயிலாக 45 சேவைகளும், நகர்ப்புறங்களில் 13 துறைகளின் வாயிலாக 43 சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான மனுக்களும் ஏற்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

இதற்காக, நவம்பர் 15 வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அக்.10 வரை 9,055 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை கோரி இந்த முகாம்களில் இதுவரை 28 லட்சம் பெண்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

டிசம்பர் 15 முதல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நவம்பர் 14ஆம் தேதி முடிவடைய உள்ளன. இதற்கிடையே, உரிமைத் தொகை கோரி புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களை வருவாய்த் துறையினர் களஆய்வு செய்து வருகின்றனர்.  இந்த பணி நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிவடையும். முகாம்களில் விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க முதலமைச்சர் முடிவெடுத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *