உலகின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மனித குல வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு துறைகளில் பங்களிப்பாற்றிய சாதனையாளர்கள் மற்றும் முன்னோடிகளை சிறப்பிப்பதே இந்த நோபல் பரிசின் நோக்கமாகும்.
அதன்படி 1901ஆம் ஆண்டு முதல் இந்த நோபல் பரிசானது மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் பெரும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக, அக்டோபர் மாதம் இந்த நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். 2025ஆம் ஆண்டுக்கான இயற்பியல், மருத்துவம், வேதியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசுகள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன. கடைசியாக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று (13.10.2025) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோயல் மோகிர், பீட்டர் ஹோவிட் மற்றும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிலிப் அகியோன் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமையான கண்டுபிடிப்புகள் எவ்வாறு பொருளாதார வளர்ச்சியை நிகழ்த்துகிறது என்பதை இவர்கள் ஆய்வு செய்து விளக்கியதற்காக மூவருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் நீட்டித்த பொருளாதார வளர்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்ததற்காக ஜோயல் மோகிருக்கும், ஆக்கப்பூர்வமான அழிவு அதாவது தேவையற்ற பழைய அம்சங்கள் அழிந்து புதியவை உருவாகி வளர்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது என்ற கோட்பாட்டை உருவாக்கியதற்காக பீட்டர் ஹோவிட் பிலிப் அகியோன் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.
நோபல் பரிசு வெற்றியாளர்களுக்கு 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன்கள் (அதாவது $1.2 மில்லியன்) பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இந்தாண்டு பரிசு வென்ற அனைத்துத் துறை வெற்றியாளர்களுக்கும் வரும் டிசம்பர் 10ஆம் தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.