புதுடில்லி, அக்.13- அரியானாவின் மூத்த அய்பிஎஸ் அதிகாரி புரன் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களின் பாரபட்சமான அணுகுமுறையால் மூத்த அதிகாரிகளுக்குக் கூட சமூக நீதி மறுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 7 அன்று சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட 2001ஆம் ஆண்டு அதிகாரியான புரன் குமார், ஏடிஜிபியாக பணியாற்றி வந்தார். புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார் அய்ஏஎஸ், ஹரியானா அரசின் வெளியுறவு ஒத்துழைப்புத் துறையின் ஆணையர் மற்றும் செயலாள
ராக உள்ளார்.
சோனியா காந்தி, அம்னீத் பி குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உங்கள் கணவரும் மூத்த அய்பிஎஸ் அதிகாரியுமான புரன் குமார் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் உங்களுக்கும் உங்கள் முழு குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “புரன் குமாரின் மறைவு, அதிகாரத்தில் இருப்பவர்களின் பாரபட்சமான அணுகுமுறை, மூத்த அதிகாரிகளின் சமூக நீதியை இன்றளவும் பறிப்பதாகவே உள்ளது என்பதைக் காட்டுகிறது.
நீதிக்கான இந்த பாதையில், நானும் லட்சக்கணக்கான நமது நாட்டு மக்களும் உங்களுடன் நிற்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அய்பிஎஸ் அதிகாரியான புரன் குமார், 8 பக்க தற்கொலை குறிப்பை தட்டச்சு செய்து அதில் கையொப்பமிட்டுள்ளார்.
அதில், ஆகஸ்ட் 2020 முதல் ஹரியானாவின் சம்பந்தப்பட்ட அந்த மூத்த அதிகாரிகளால் தொடர்ந்து நடத்தப்படும் அப்பட்டமான சாதி அடிப்படையிலான பாகுபாடு, இலக்கு வைக்கப்பட்ட மன துன்புறுத்தல், பொது அவமானம் மற்றும் அட்டூழியங்கள் தாங்க முடியாதவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.