சென்னை, அக். 12- சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.53 கோடி செலவில் பன்னாட்டு தரத்தில் அமைக்கப்பட்டுள்ள “கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மய்யத்தை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (11.10.2025) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி நகரில், 53 கோடி ரூபாய் செலவில் இந்தியாவிலேயே முதன்முறையாக பன்னாட்டு தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மய்யத்தை திறந்து வைத்தார்.
கொளத்தூர் பகுதி வண்ண மீன் வர்த்தகத்தில் நாட்டிலேயே முக்கிய மய்யமாக திகழ்ந்து வருகிறது.
இப்பகுதியில் மட்டும் சுமார் 500 குடும்பங்கள் வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தினை சார்ந்து வாழ்கின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 26.06.2021 அன்று கொளத் தூரில் வண்ண மீன் உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசித்து, வண்ண மீன் வர்த்தகத்தினை பன்னாட்டு அளவில் எடுத்துச் செல்லவும், சந்தைப்படுத்துதலுக்கான தேவைகள் குறித்தும் அவர்களது கோரிக்கை களை கேட்டறிந்தார்.
அதனடிப்படையில், வண்ண மீன் வர்த்தகத் தினை பெரிய அளவில் மேம்படுத்திடவும், கொளத்தூர் பகுதியில் நடை பெற்று வரும் வர்த்தகத்தினை உலக அளவில் கொண்டு சென்றிடவும், தமிழ்நாட்டில் முதன் முறையாக உலகத் தரத்திலான பிரத்தியேக வண்ண மீன் வர்த்தக மய்யம் நிறுவப்படும் என 2021-2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஒருங்கிணைப்புடன், சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி நகரில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மய்யம் அமைத்திட முதலமைச்சர் கடந்த 26.08.2024 அன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கல்
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மய்யம் 15,945 சதுர மீட்டர் நிலப் பரப்பளவில் 11,650 சதுர மீட்டர் கட்டடப் பரப்பளவில் 53 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் (G+2) மொத்தம் 188 கடைகள், அதில் 5 உணவகங்களுடன் கட்டப்பட்டு, முதல்-அமைச்சரால் நேற்று (11.10.2025) வண்ண மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
மேலும், வண்ண மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வண்ண மீன் வர்த்தக மய்ய கடைகளுக்கான ஒதுக்கீட்டு ஆணை களையும் முதலமைச்சர் வழங்கினார்.
வண்ண மீன் வர்த்தக மய்யத்தின் தரைத் தளத்தில் 20 சதுர மீட்டர் பரப்பளவில் 48 கடைகள், 30 சதுர மீட்டர் பரப்பளவில் 5 கடைகள், 21 முதல் 37 சதுர மீட்டர் பரப்பளவில் 11 கடைகள், என மொத்தம் 64 கடைகளும், 150 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு அலுவலகம், 2 உருளை வடிவ மீன்காட்சியகம், 16 ஆண்களுக்கான கழிப்பறைகள், 8 பெண்களுக்கான கழிப்பறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.
பெண்களுக்கான…
முதல் தளத்தில் 20 சதுர மீட்டர் பரப்பளவில் 58 கடைகள், 21 முதல் 37 சதுர மீட்டர் பரப்பளவில் 12 கடைகள், என மொத்தம் 70 கடைகளும், 16 ஆண்களுக்கான கழிப்பறைகள், 8 பெண்களுக்கான கழிப்பறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், இரண்டாம் தளத்தில் 20 சதுர மீட்டர் பரப்பளவில் 46 கடைகள், 21 முதல் 37 சதுர மீட்டர் பரப்பளவில் 8 கடைகள், என மொத்தம் 54 கடைகளும், 325 சதுர மீட்டர் பரப்பளவில் ஓர் உணவகம், 16 ஆண்களுக் கான கழிப்பறைகள், 8 பெண்களுக் கான கழிப்பறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கழிப்பறைகளும் கட்டப்பட்டுள் ளன.
இந்த வண்ண மீன் வர்த்தக மய்யத்தில் 3 மின்தூக்கிகள், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கீழ் நிலை நீர்தேக்க தொட்டி, 45,000 லட்சம் லிட்டர் கொள்ளவுடன் 3 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், 200 இரண்டு சக்கர வாகனங் களும், 188 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கான வசதிகளுடன் அமைக்கப் பட்டுள்ளன.
பயிற்சிக்கூடம்
இந்த வண்ண மீன் வர்த்தக மய்யத்தில், மொத்த மற்றும் சில்லறை வண்ண மீன்கள் விற்பனை செய்வதற்காக 185 கடைகள், ஆய்வகம், பயிற்சிக் கூடம், உணவு அரங்கம், பார்வையாளர் அரங்கம் ஆகிய வசதிகளுடன் வண்ண மீன் உற்பத்தியாளர், விற்பனையாளர் மற்றும் ஏற்றுமதியாளர் ஆகியோருக்கான சந்திப்பு மய்யமாக கட்டமைக்கப்பட்டுள்
ளது.
சென்னையின் புதிய அடை யாளமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வண்ண மீன் வர்த்தக மய்யத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதுடன், இப்பகுதியில் வண்ண மீன் வர்த்தகம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து, நாட்டிற்கே முன் மாதிரியாக அமையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.