புதுடில்லி, செப்.30 இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 26 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ‘தி லான்செட்’ இதழில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 33 ஆண்டுகளில் 26 விழுக்காடு அதிகரித்துள்ளது. 1990-ல் 1 லட்சம் மக்கள்தொகைக்கு 84.8 ஆக இருந்த புற்றுநோய் பாதிப்பு 2023-இல் 107.2 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் புற்றுநோய் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு 21 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேவேளையில் அமெரிக்கா மற்றும் சீனாவில் 33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய இரண்டும் கணிசமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் அபிஷேக் சங்கர் கூறுகையில், ‘‘அமெரிக்கா மற்றும் சீனாவில் புற்றுநோய் பாதிப்பும் உயிரிழப்பும் கணிசமாக குறைந்ததற்கு, இவ்விரு நாடுகளிலும் வலுவான புகையிலை கட்டுப்பாடு, அனைவருக்கும் தடுப்பூசி, ஒழுங்கமைக்கப்பட்ட பரிசோதனை காரணமாக உள்ளது. அதிக புகையிலை பயன்பாடு, உடல் பருமன், நோய்த்தொற்றுகள் போன்ற ஆபத்து காரணிகள் இந்தியாவில் அதிகமாக உள்ளது. அதேவேளையில் புற்றுநோய் தொடக்க நிலையிலேயே கண்டறியப்படுவது குறைவாக உள்ளது. எனவே புற்றுநோய் ஆபத்தை தடுக்கும் உத்திகளை நாம் அவசரமாக வலுப்படுத்த வேண்டும்” என்றார்.
கரூர் துயரம்
புதிய பட்டியல் வெளியானது
கரூர் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேலு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 18 பெண்கள், 13 ஆண்கள், 10 குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். சிகிச்சையில் இருந்த 113 பேரில் 53 பேர் வீடு திரும்பியதாகவும், 60 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப் பதாகவும் கூறியுள்ளார். மேலும், இதுவரை 18 பேரின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கரூர் துயரம்.. பதைபதைக்க வைக்கும் புதிய காட்சிப் பதிவு
கரூர் துயர சம்பவத்தில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் நிகழ்ந்த இடத்தின் புதிய காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது. பிரசார கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது தவெக தொண்டர் ஒருவர் தனது கைப்பேசியில் எடுத்த சுய படக்காட்சியில் விஜய் பேருந்துமீது நின்று பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு பகுதியில் பள்ளத்தில் விழுந்த சிலர் நெரிசலில் மிதிபடும் கொடூரமான காட்சிகள் பதிவாகியுள்ளன.