சென்னை, செப்.24- ஜி.எஸ்.டி. குறைப்பை 8 ஆண்டுகளுக்கு முன்பே செய்யாதது ஏன்? அவ்வாறு செய்திருந்தால் மக்கள் எப்போதோ பல கோடிகளை சேமித்து இருக்கலாமே? என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜி.எஸ்.டி. குறைப்பு
ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி சீர்திருத்த நடவடிக்கை கடந்த 22.9.2025 அன்று அமலுக்கு வந்தது. இதன் மூலம் 375 பொருள்களுக்கான விலை குறைந்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் ஜிஎஸ்டி குறைப்பில் மாநில அரசின் பங்கும் சரிபாதியாக இருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரி வித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று (23.9.2025) வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறி யிருப்பதாவது:-
ஜிஎஸ்டி குறைப்பாலும், வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் ரூ.2.5 லட் சம் கோடியை சேமிக்கலாம் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம். 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டி ருந்தால், இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?
மேலும், தற்போது அறி விக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கில் இருந்து தான் செய்யப்படு கிறது. இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும், பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது.
மற்றொரு புறம், ஒன்றிய பாரதீய ஜனதா அரசு மாநிலங்களுக்கு நியா யமாக சேரவேண்டிய நிதியை தர மறுத்து வருகிறது. ஹிந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ் நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?
தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்ப ளியுங்கள், உரிய நிதியை விடு வியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்க ளைப்பயனடையவிடுங்கள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.