ராகுல்காந்தி கடும் குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு
புதுடில்லி, செப்.19 நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். அந்த நபர்கள் பயன்படுத்திய கைப்பேசி எண்கள், ஓடிபி விவரங்களை ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம்
பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்அய்ஆர்) மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வாக்குகள் திருடப்படுவதாகவும், இதில் பாஜகவுடன், தேர்தல் ஆணையம் கூட்டுசேர்ந்து சதி செய்வதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், டில்லியில் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி நேற்று (18.9.2025) கூறியதாவது: ‘வாக்குத் திருட்டு 2.0’ தகவலை தற்போது ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக் காளர்களை இணைய வழி மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது. கருநாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்களை நீக்கும் முயற்சி நடந்திருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. இது நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதியாக இருக்கலாம்.
கோதாபாய் என்ற பெண்ணின் பெயரைப் பயன்படுத்தி உள்நுழைவு (லாகின்) அடையாள எண் உருவாக் கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவருக்கு தெரியாமலேயே 12 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. போலி உள்நுழைவு அடையாள எண், சந்தேகத்துக்குரிய, வெளிமாநில கைப்பேசி எண்களை பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது. அதேபோல, சூர்யகாந்த் என்பவரது பெயரில் இருந்து 14 நிமிடங்களில், 12 வாக்காளர்களை நீக்குவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நீக்கப்பட்ட வாக்காளர்கள் சூர்யகாந்த், பபிதா சவுத்திரி ஆகியோர் உங்கள் முன்புதான் உள்ளனர்.(அவர்களை மேடையில் அறிமுகம் செய்தார்.)
மோசடி
நாகராஜ் என்பவர் அதிகாலை 4.07 மணிக்கு 2 வாக்காளர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்களை 38 விநாடிகளில் சமர்ப்பித்துள்ளார். தனி நபர்கள் இது போல விண்ணப்பிப்பது சாத்தியம் அல்ல. எனவே, அழைப்பு மய்யங்களில் (கால் சென்டர்) பயன்படுத்தப்படும் மென்பொருள் மூலமாக இந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பல மாநிலங்களில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க ஒரே செல்போன் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, புதிதாக வாக்காளர்களை சேர்க்கவும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளது. மகாராட்டிராவின் ராஜுரா சட்டப்பேரவை தொகுதியில் போலியாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு வாக்காளரின் பெயர் ‘YUH UQJJW’ எனவும் அவரது முகவரி ‘sasti, sasti’ என்றும் உள்ளது. கருநாடகா, மகாராட்டிரா, பீகார், அரியானா, உத்தர பிரதேசத்தில் இதே முறையில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார்.
ஒரு வாரம் கெடு
இணைய வழி மூலமாக வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது தொடர்பான தகவல்களை அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கருநாடக சிஅய்டி காவல்துறையினர் கடந்த 18 மாதங்களில் 18 கடிதங்கள் அனுப்பினர். ஆனால், தேர்தல் ஆணையம் உருப்படியாக எந்த பதிலும் தரவில்லை. அரசியல்சாசனம் மீது தாக்குதல் நடத்தி அழிப்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார். கருநாடக சிஅய்டி காவல்துறையினர் கேட்கும் கைப்பேசி எண்கள், ஓடிபி விவரங்களை, தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரை தலைமை தேர்தல் ஆணையர் தீவிரமாக பாதுகாக்கிறார் என்பது உறுதியாகிவிடும்.இவ்வாறு ராகுல் கூறினார்.