சென்னை செப்.13- காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று காஞ்சிபுரம் – சென்னைக்கு புதிய குளிர்சாதன பேருந்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து துவக்கி வைத்து, பேருந்தில் பயணம் செய்தார்.
புதிய குளிர்சாதன பேருந்தில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு இருக்கையின் அருகில் கட்டுப்பாட்டு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏதாவது குறைபாடு இருப்பின் சுவிட்ச்சை அழுத்தினால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.
பேருந்து உட்புறம் நிறுத்தம் தெரிவிக்கும் தகவல் பலகை பொருத்தப்பட்டுள்ளது. பேருந்தின் உள்ளே இரண்டு கண்காணிப்பு கருவிகள் பொருத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் முன்புறம் உள்ள Display மூலம் பேருந்து பின்புறம் எடுக்கும்போது படக்கருவி மூலம் கண்டறிந்து பாதுகாப்பாக இயக்கவும், படிக்கட்டில் தடுப்புக் கருவி பொருத்தப்பட்டு, பயணி படிக்கட்டில் நின்றால் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கபடும்.
பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய அரசு குளிர்சாதன பேருந்தை இன்று மக்கள் பயன்பாட்டிற்காக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து துவக்கி வைத்து, பேருந்தில் பயணம் செய்தார்.
இப்பேருந்து நான்கு முறை காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கும், அதேபோல் சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு நான்கு முறை பயணிகள் பயணிக்கும் வண்ணம் அட்டவணை செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து காலை 5.20 மணிக்கும், 9.20 மணிக்கும், மதியம் 1.20 மற்றும் மாலை 5.20 மணிக்கும் ஆகிய நேரங்களில் அதிநவீன அரசு குளிர்சாதன பேருந்து புறப்படும் எனவும், அதேபோல் சென்னையிலிருந்து காலை 7.15 மணிக்கும், 11.15 மணிக்கும், மதியம் 3.30 மணிக்கும் மற்றும் இரவு 7.30 மணிக்கும் ஆகிய நேரங்களில் அதிநவீன அரசு குளிர்சாதன பேருந்து புறப்படவுள்ளது. இக்குளிர்சாதன பேருந்தில் 54 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்து ஒருவழி பயணம் தூரம் 75 கி/மீ ஆகவும், இந்த பயணம் தூரத்தை 1 மணி 40 நிமிடங்களுக்குள் சென்றடையும் வண்ணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.