தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தார். தமிழில் பேசினார். ஆனால் அவருடைய சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது; மானிடச் சமுதாயத்திற்கானது! உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது! அதுதான் பெரியாரியம்!
பெரியாரியம் என்றால் என்ன என்று யாராவது கேட்டால்,
அவர்களுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டிய அடிப்படைகள் என்னவென்றால் –
* சுயமரியாதை
* பகுத்தறிவு
* சமதர்மம்
* சமத்துவம்
* மானுடப்பற்று
* இரத்த பேதமில்லை
* பால் பேதமில்லை
* சுய முன்னேற்றம்
* பெண்கள் முன்னேற்றம்
* சமூகநீதி
* மதசார்பற்ற அரசியல்
* அறிவியல் மனப்பான்மை
என்று பெரியாரியத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பரந்து விரிந்த அறிவுக்கடலான அவருடைய சிந்தனைகளை உள்வாங்க, இந்த அறிமுகம் நிச்சயம் பயன்படும்!
இந்தச் சிந்தனைகளின் அடிப்படையிலான சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளாக, ஆறு குறிப்புகளை, ‘குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதினார்.
அவற்றைச் நான் சொல்லவேண்டும் என்றால்,
முதலில், சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு, தாழ்வும் இருக்கக் கூடாது.
இரண்டாவது, ஏழை, பணக்காரன் ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாக இருக்கவேண்டும்.
மூன்றாவது, ஆணுக்கும், பெண்ணுக்கும் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்க வேண்டும்.
நான்காவது, ஜாதி, மதம், தேசம், வருணம், கடவுள் ஆகியவை இல்லாத மனித சமூக ஒற்றுமை நிலவ வேண்டும்.
அய்ந்தாவது, அனைத்து மனிதரும் உழைத்து அதன் பயனை அனைவரும் சமமாக பயன்படுத்த வேண்டும்.
ஆறாவது, யாரும் எதற்கும் அடிமை ஆகாமல், அவரவர் அறிவு – ஆராய்ச்சி – உணர்ச்சி – காட்சி ஆகியவற்றுக்கு இணங்கி நடத்த முழு சுதந்திரம் இருக்க வேண்டும்.
இவையெல்லாம் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மக்களுக்கும் பொதுவான கருத்தியல்கள்! அதனால்தான் பெரியார் கொள்கை, உலகளாவிய கொள்கை என்று சொல்கிறோம்.
இவ்வளவு முற்போக்கான கருத்தியல்களை, நூறு ஆண்டுகளுக்கும் முன்பே, அதுவும் பழமைவாதங்களும், மூடநம்பிக்கைகளும் நிரம்பியிருக்கின்ற மண்ணில் பேசி, மக்களை எழுச்சிப் பெற வைத்தவர் தந்தை பெரியார்!