இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் படுகொலை

டெய்ர் அல்-பலா, செப். 1- இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை தொடக்கத்தில் இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களை மீட்பதற்காக தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இதில், ஹமாஸ் அமைப்பின் பல்வேறு தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். அதன் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.

21 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

காசா நகரில் நேற்றில் இருந்து இதுவரை 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் ஆயுத பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபெய்டா இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டு உள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கத்ஜ் நேற்று (31.8.2025) அறிவித்து உள்ளார்.

காசா நகரில் இஸ்ரேல் புதிய ராணுவ நடவடிக்கையை தொடங்கிய நிலையில், கடந்த வெள்ளி கிழமை ஒபெய்டா கடைசியாக அறிக்கை வெளியிட்டார்.

இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நடத்திய வாராந்திர அமைச்சரவை கூட்டத்தின்போது, மந்திரிகளிடம் பேசும்போது, ஹமாஸ் அமைப்பின் நீண்டகால செய்தி தொடர்பாளர் ஒபெய்டா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால், அவர் கொல்லப்பட்டாரா? என தெரியவில்லை என்றார். ஹமாஸ் அமைப்பில் ஒருவரும் இதுபற்றி எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அதனையும் நான் கவனித்தேன் என்றார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *