சென்னை, செப்.1- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-குரூப் 4ல் உள்ள வனக்காவலர் மற்றும் வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது.
இதற்காக தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை சரியாக பதிவேற்றவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக 30ஆம் தேதி (நேற்று) முதல் வரும் 5ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் இணையதளம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே. அத்தேர்வர்கள் அனைவரும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணைய தளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமைகோரல், விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.