மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை, ஆக.30– தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.88 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தொழில்துறை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதோடு நிற்காமல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்தி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை செய்யும்படி தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த வகையில், தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.8.2025) இங்கிலாந்து, ஜெர்மனி செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெர்மனி புறப்பட்டுள்ளார். அவரை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் வழியனுப்பி வாழ்த்து தெரிவித்தனர். இன்று இரவு 9 மணி அளவில் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி சென்றடைகிறார்.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஒருவார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன். தமிழ்நாட்டிற்கு பெருமுதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 929 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதில் பெரும்பாலான ஒப்பந்தங்கள் முதலீடாக மாறி பணிகள் தொடங்கி விட்டன. இதன்மூலம் 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளி விவரங்களே சாட்சி. வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
புதிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் வருகின்றனர். கருத்துக் கணிப்புகள் என்ன சொன்னாலும், அதையெல்லாம் மிஞ்சி திமுக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணங்கள் எப்படி இருந்ததோ, அதை போலவே என்னுடைய பயணங்களும் இருக்கும் என நினைக்கிறார். நாங்கள் போடும் ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இனியும் வரப்போகின்றன.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. நான் அதிகம் பேச மாட்டேன். பேச்சை குறைத்து செயலில் நம் திறமையை காட்ட வேண்டும். யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. ஏன், பீகார் மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் நினைத்தது நடக்காது. அங்கேயும் மக்களை எழுச்சி பெற வைக்க, தேர்தல் ஆணையம் உதவியிருக்கிறது என்பதே உண்மை.இவ்வாறு அவர் கூறினார்.