சென்னை, ஆக.30- இந்திய அரசின் 2023-2024ஆம் ஆண்டுக்கான தொழில்துறை கணக்கெடுப்பின்படி, தொழில்துறை வேலைவாய்ப்புகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாகவும், இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் 15.24 சதவீதம் பேர் இங்கு தான் இருப்பதாகவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் சமூக வலைத்தளப் பதிவில் கூறப்பட்டுள்ள ‘இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் சக்தி மய்யமாக தமிழ்நாடு உள்ளது’ என்ற வார்த்தைகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
‘திராவிடத்தால் வாழ்கிறோம். திராவிடமே நம்மை உயர்த்தும். எல்லோரையும் வாழ வைக்கும். அமித்ஷா முதல் எடப்பாடி பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜனதா அரசே தந்துள்ள ‘நெத்தியடி பதில்’ இதோ, இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் சக்தி மய்யமாக தமிழ்நாடு உள்ளது என்று ஒன்றிய அரசே அறிவித்து உள்ளது.
சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் – போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும். அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.