புதுடில்லி, ஆக.24 இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட பாரம்பரிய படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரை செய்துள்ளது.
யுஜிசி எனப்படும் பல்கலைக் கழக மானிய குழு வேத கணிதம், சமஸ்கிருதம், யோகா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய படிப்புகளை அறிமுகப்படுத்துமாறு அனைத்துப் பல்க லைக் கழகங்களுக்கும் ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இந்த நிலையில்,இளங்கலை பட்டப்படிப்புக்கான வரைவு கணித பாடத்திட்டத்தை யுஜிசி முன்மொழிந்துள்ளது.
இதில் சூத்திர அடிப்படையிலான எண் கணிதம், இயற் கணிதத்தை பயிற்றுவிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி வெளியிட்ட அறிவிப்பில்,
‘‘திட்ட வடிவமைப்பு மற்றும் பாடத்திட்ட மேம்பாட்டில் நெகிழ்வுத்தன்மை மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் ஒரு மாதிரி பாடத்திட்டமாக இந்த வரைவு செயல்படும். பண்டைய இந்திய அறிஞர்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் பூமியின் இயக்கத்தைப் பயன்படுத்தி நேரத்தை எவ்வாறு கணக்கிட்டார்கள் என்பதை ஆராயும் பாரம்பரிய இந்திய நேர கட்டுப்பாடு மற்றும் பஞ்சாங்கம் குறித்த பாடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வேத பண்பாடுகள், ஜைன,புத்த இலக்கியம், உபநிஷத்துகள், ராமாயணம், மகாபாரதம், திருக்குறள் ஆகியவற்றை பாடங்களாகச் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.