மராட்டிய மாநிலத்தில் ஒரு குரல்!

3 Min Read

மராட்டிய மாநிலத்தில் ஒரு குரல்!

மாலேகான் குண்டுவெடிப்புத் தொடர்பான குற்றவாளிகள் விடுதலையை அடுத்து ஹிந்துக்கள் அனைவரும் நல்லவர்கள் – அவர்கள் தீவிரவாதிகள் அல்லர் என்று அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஹிந்துக்கள் என்பவர்கள் வேறு, கொலைக் குற்றம் செய்த ஸநாதனிகள் வேறு என்று   மராட்டிய மாநிலம்  கல்வா-மும்பரா தொகுதி சட்டமன்ற தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார் கட்சி) உறுப்பினர் ஜிதேந்திர அவாட் ஸநாதனத்திற்கும், ஹிந்துவிற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து கவிதை வடிவில் மராட்டியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுவரை குறிப்பாக வட இந்தியாவில் ஸநாதனத்தைப் பற்றி என்ன பேசினாலும் பெரும் பிரச்சினையைக் கிளப்பும் எந்த ஒரு ஹிந்துத்துவ பாஜக பிரபலங்களும் அவரை விமர்சிக்க முடியாமல் அமைதியாகிவிட்டனர்.

மராட்டியில் ஜிதேந்திர அவாட் எழுதிய கவிதை வடிவிலான பதிவின் தமிழாக்கம்:

‘‘ஹிந்து மற்றும் ஸநாதனி இடையே உள்ள வேறுபாடுகளை, வரலாற்றுச் சம்பவங்களை மேற்கோள் காட்டி, ஒரு பார்வை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

‘‘மராட்டியத்தின் சீர்த்திருத்தவாதி துக்காராம் மகராஜ்  ஒரு ஹிந்து;  மூடநம்பிக்கை மற்றும் பேஷ்வா சித்பவன் பார்ப்பனர்களின் ஜாதிவெறியை அம்பலப்படுத்தி அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்தார்; ஸநாதனிகள் துக்காராம் மகராஜை தண்ணீரில் மூழ்கடித்துச் சாகடித்தனர்.

மகாராட்டிராவில் பகுத்தறிவு ஞானியார் ஞானோபா ஒரு ஹிந்து, அவர் மராட்டியத்தில் ஸநாதனிகள் கூட்டம் பண்டாரி விட்டலா கோவில் பெயரில் மக்களது உழைப்பைச் சுரண்டி ஏய்த்து தங்கள் வயிறு வளர்ப்பதைத் தனது பிரச்சாரம் மூலம் அம்பலமாக்கினார். ஸநாதனிகள் அவரது பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டினர்.

மராட்டியத்தில் சாமானிய மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியவர் சமூகசீர்த்திருத்தவாதி ஆகார்கர், பிறப்பால் ஹிந்து;  மராட்டியத்தில் சமூகச் சீர்த்திருத்தங்களை முன்னெடுத்தவர். ஆனால் ஸநாதனிகள் அவர் உயிருடன் இருக்கும்போதே அவரது இறுதி ஊர்வலத்தை நடத்தினர். இதனால் அவர் மனம் நொந்து உடல் நலிவுற்று இறந்துபோனார்.

பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர் குரு கர்வே, அவரும்  ஹிந்துதான்,  கைம்பெண் திருமணங்களை ஆதரித்தார். ஸநாதனிகள் அவரது வீட்டுப் பெண்களைக் மிகவும் கேவலமாகக் கொச்சைப்படுத்தினார்கள்

மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி ஹிந்து; மராட்டியர்களின் அடையாளமாகத் திகழும் சிவாஜிக்கு பட்டாபிஷேகம் செய்ய மறுத்தார்கள் பார்ப்பனர்கள். காரணம், சிவாஜி சத்திரியர் இல்லையாம், அவர் சூத்திரனாம், சூத்திரனுக்குப் பட்டாபிஷேகம் செய்வது சூடான பாறையில் உட்காருவதற்குச் சமம் என்று கூறினார்கள்,

சிவாஜியின் குடும்பக் கோவிலான துல்ஜா பவானி கோவிலுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுத்தனர். அதற்குக் காரணம் கூறும்போது ‘‘ராகுகாலம் துவங்கிவிட்டதால் மன்னர் கோவிலுக்குள் வரக்கூடாது’’ என்றனர். அதே நேரத்தில் அவருடன் வந்த ராம்தாஸ் சாஹோ என்பவரை அனுமதித்தனர். காரணம் அவர் பார்ப்பனர்.

அவரது அரசவைத் தலைமை மதகுரு சிவாஜிக்கு பட்டாபிஷேகம் செய்ய மறுத்தார். இதனை அடுத்து சிவாஜி காசியில் இருந்து பார்ப்பனர்களை அழைத்து வந்து அவர்களுக்கு எடைக்கு எடைத் தங்கம் கொடுத்து பட்டாபிஷேகம் செய்துகொண்டார். ஹிந்துவான  மன்னரை கோவிலுக்குள் விடமறுத்து அவமதித்தவர்கள், பட்டாபிஷேகம் செய்ய மறுத்தவர்கள் ஸநாதனிகள்

ஷாஹு மகராஜ் ஹிந்து.  அவர் அனைவருக்கும் சமமான வகையில் வேலை வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என்று கூறி அனைத்து ஹிந்துக்களுக்கென இட ஒதுக்கீடு முறையைக் கொண்டு வந்தார். இதனால் கோபமுற்ற  ஸநாதனிகள் அவரைக் கொலை செய்ய முயன்றனர். .

மகாத்மா பூலே  ஹிந்து,  பெண்களுக்குக் கல்வி அளித்து, அவர்களுக்குப் புதிய சிறகுகளைக் கொடுத்தார்.  ஸநாதனிகள் – அவருக்கு எதிராகக் கொலைகாரர்களை ஏவிவிட்டனர்.

புரட்சித்தாய் ஜோதி சாவித்திரி ஹிந்து.  இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் மற்றும் பெண்களுக்கு என்று பள்ளிக்கூடம் திறந்தவர்; மற்றவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக தானே கல்வி கற்றவர்.

ஸநாதனிகள் அவரை அவமானப்படுத்தினர். மலத்தையும், சாணியையும் அவர் மீது வீசினார்கள். இதற்காகவே அவர் எப்போதும் இரண்டு உடைகளை பையில் எடுத்துச்செல்வார்.

பாபாசாகேப் அம்பேத்கர் மராட்டியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் சாமானிய மக்களின் உரிமைகளுக் காகத் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்.

ஆனால், அவரை இன்றுவரை இந்த ஸநாதனிகள் வாய்ப்புக் கிடைக்கும் போது எல்லாம் அவமானப்படுத்தி வருகின்றனர்.’’

இது போன்ற தகவல்களை மராட்டிய மொழியில் ஜிதேந்திர அவாட் தனது கவிதை நூலில் வாரிக் கொட்டியிருந்த நிலையில், அதை மறுத்தோ, வேறு வகையில் எதிர்த்தோ மராட்டியத்தில் யாரும் குரல் கொடுக்க முடியவில்லை; காரணம் அவர் கூறிய தகவல்கள் எல்லாம் மராட்டியத்தில் வாழ்ந்தவர்கள் செயல்பாடுகள் பற்றியதாகும்.

ஹிந்து வேறு ஸநாதனிகள் வேறு என்று அவர் எழுதியுள்ளதில் கருத்து மாறுபாடுகள் உண்டு என்றாலும் (ஹிந்து மதத்தில் உள்ள பிறப்பின் அடிப்படையிலான வருணாசிரமம் என்பது ஸநாதனம் இல்லையா என்பது முக்கிய கேள்வியாகும்) அவர் தொகுத்துக் கொடுத்த தகவல்கள் எல்லாம் உண்மையன்றி, வேறு அல்ல என்பது மட்டும் உண்மையே!

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *