நீண்ட காலம் நிலுவையில் உள்ள சிறு குற்ற வழக்குகள் ரத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

சென்னை, ஆக.20- புகார்தாரர் இறப்பு, குற்றவாளி தலைமறைவு உள்ளிட்ட பல காரணங்களால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 13 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நிலுவையில்… உள்ள வழக்குகள்

3 ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய சிறு குற்றவழக்குகள், 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்தால், அதை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தியை நியமித்து தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சிறு குற்ற வழக்குகளை மாவட்ட நீதிபதிகள் மூலம் பெற்று நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி தாமாக முன் வந்து நேற்று விசாரணைக்கு எடுத்தார்.

கள்ளநோட்டு வழக்கு

பெரம்பலூர் மாவட்டத்தில், சீனிவாசன் என்பவர் மீது தொடரப்பட்ட வழக்கு 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் புகார் கொடுத்தவரும், அவரது மனைவியும் இறந்து விட்டனர். அதனால், சீனிவாசன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல் நிலையத்தில், 2009ஆம் ஆண்டு சரோஜா என்பவர் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

இதுவரை எந்த விசாரணையும் நடைபெறாததால், இந்த வழக்கையும் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, வழக்கை ரத்து செய்தார்.

13 வழக்குகள் ரத்து

அரியலூர் மாவட்டத்தில் மாணிக்கவேல் என்பவர் பரமசிவம் என்பவரை தாக்கியதாக 2014ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது புகார் கொடுத்த பரமசிவம் இறந்து விட்டார். வெளிநாடு சென்ற மாணிக்கவேல் கடந்த 12 ஆண்டுகளாக என்ன ஆனார்? என்பதே தெரியவில்லை.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி, இத்தனை ஆண்டுகளாக குற்றம் சாட்டப்பட்டவரை காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை என்று கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்துப் போராட்டம் நடத்தியதற்காக சேலம் மாவட்டத்தில் பலர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் இதுபோல ரத்து செய்தார். மொத்தம் நேற்று மட்டும் 13 வழக்குகளை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *