சென்னை, ஆக. 17- இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத கூடுதல் வரியால் தமிழ்நாட்டிற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. ஜவுளி, ஆடைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே விதிக்க வேண்டும். மேலும், ஒன்றிய அரசு சிறப்பு நிதி நிவாரண தொகுப்பு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் 2ஆம் முறையாக பதவி ஏற்ற நாள்முதலே இந்தியாவுக்கு எதிரான பல்வேறு அறிவிப்புகளை வௌியிட்டு வருகிறார். இந்திய பொருட்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கூடுதலாக 25 சதவீத வரி விதித்துள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்குவதற்காக மேலும் 25 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளார். இந்த 50 சதவீத வரி உயர்வு வரும் 27ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த வரி விதிப்பானது இந்திய ஏற்றுமதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல துறைகளில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆடை, ஜவுளி உள்ளிட்ட துறைகளில் ஏற்றுமதி குறைந்துள்ளது. எனவே, இதுகுறித்து பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் கடிதம்
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று (16.8.2025) எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்க கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறேன். தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறோம். தற்போதைய 25 சதவீத வரி மற்றும் அதன் தொடர்ச்சியாக 50 சதவீத வரி அதிகரிப்பு காரணமாக கடுமையான தாக்கங்களை எதிர்கொள் வதால், தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கவலை அளிக்கும் ஒரு பிரச்சினை குறித்து பிரதமர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியான 433.6 பில்லியன் மதிப்பிலான பொருட்களில் 20 விழுக்காடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் 52.1 பில்லியன் பொருட்களில் 31 விழுக்காடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதை கோடிட்டு காட்டுகிறேன். இவ்வாறு அமெரிக்க சந்தையை தமிழ்நாடு அதிகமாக சார்ந்திருப்பதால், இறக்குமதி வரியின் தாக்கம், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும். இந்த வரிவிதிப்பு தமிழ்நாட்டின் உற்பத்தி துறை மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும்.
30 லட்சம் பேர் வேலை இழப்பர்
இந்த வரி விதிப்பினால் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோ மொபைல்ஸ், ரத்தின கற்கள் மற்றும் நகைகள், தோல், காலணிகள், கடல் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் துறைகளில் மிகவும் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. இந்த துறைகள் அனைத்தும் அதிக தொழிலாளர்களை சார்ந்தவை என்பது இன்னும் கவலைக்குரியது.
இதில், எந்தவொரு ஏற்றுமதி மந்த நிலையும் விரைவாக பெருமளவிலான பணி இழப்புகளுக்கு வழிவகுக்கும். 2024-2025ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு 28 சதவீத பங்களித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் மிகவும் அதிகம். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஜவுளி துறை கிட்டத்தட்ட 75 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. 25 சதவீத வரி மற்றும் முன்மொழியப் பட்டுள்ள 50 சதவீத வரியின் காரணமாக, 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
ஜவுளித் துறைக்கு…
இந்த நெருக்கடியை தணிக்க, நமது ஏற்றுமதி போட்டித்தன்மைக்கு நீண்டகாலமாக தடையாக இருக்கும் கட்டமைப்பு சிக்கல்களை தீர்ப்பது அவசியம். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட துறைகளை சேர்ந்த தொழில் அமைப்புகளுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தியுள்ளேன். இந்த ஆலோசனைகளின் அடிப்படையில், ஜவுளி துறைக்கு 2 அம்சங்களில், அதாவது மனிதனால் உருவாக்கப்பட்ட இழை மதிப்பு சங்கிலிக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தலைகீழ் வரி கட்டமைப்பை சரிசெய்தல், முழு சங்கிலியையும் 5 சதவீத ஜிஎஸ்டி அடுக்குக்குள் கொண்டு வருதல் மற்றும் அனைத்து வகையான பருத்திக்கும் இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்தல் ஆகியவற்றில் துரித நடவடிக்கை தேவைப்படுகிறது.
சுங்கவரி தாக்கங்கள்
கூடுதலாக, அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தின் கீழ் 30 சதவீத பிணையமில்லாத கடன்களை 5 சதவீத வட்டி மானியம் மற்றும் அசலை திருப்பி செலுத்துதலில் 2 ஆண்டு தற்காலிக தடையுடன் நீட்டித்தல், ஆர்ஓடிடிஇபி நன்மைகளை 5 சதவீதமாக உயர்த்துதல், நூல் உள்பட அனைத்து ஜவுளி ஏற்றுமதிகளுக்கும் முன் மற்றும் பின் கடனை நீட்டித்தல் ஆகியவை நமது ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கான பிற முக்கியமான காரணிகளாக முன்னிலைப்படுத்தப் பட்டுள்ளன. உலகளாவிய வர்த்தகத்தில் சுங்கவரி தாக்கங்கள் மற்றும் போட்டி அழுத்தங்கள் காரணமாக மற்ற துறை களும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்கின்றன.
பணப்புழக்கத்தை மேம்படுத்தவும்…
அதற்கு உடனடி நிவாரணம் வழங்கி, பணப்புழக்கத்தை மேம்படுத்தவும், செலவு சுமைகளை குறைக்கவும் சுங்க வரிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்பு வட்டி மானிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். அதிக சுங்கவரி சந்தை அபாயங்களை ஈடுகட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவுபடுத்துவதையும் ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, கரோனா பெருந்தொற்று காலத்தில் செயல்படுத்தப்பட்டதை போன்று, அசலை திருப்பி செலுத்துவதில் சலுகை உள்ளிட்ட ஒரு சிறப்பு நிதி நிவாரண தொகுப்பு நமது ஏற்றுமதியாளர்களை ஆதரிக்க வேண்டியது அவசியம்.
வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல்
பிரேசில் அரசு அந்நாட்டு ஏற்றுமதி யாளர்களுக்கு வரி ஒத்திவைப்பு மற்றும் வரி சலுகைகளை அறிவித்துள்ளதை போன்று, இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு முயற்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டின் வலுவான உற்பத்தி துறை, இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியை தற்போது எதிர்கொள்கிறது. பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. பிரதமர் இந்த விஷயத்தில் அவசரமாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறையை சார்ந்தவர்களுடன் கலந்தாலோசித்திட வேண்டும். அதோடு, இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கவும், வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பு வழங்கும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.