புதுடில்லி, ஆக.14- தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க உத்தரவிடக் கோரிய தமிழ்நாடு அரசின் மனு மீது ஒன்றிய பள்ளி கல்வித்துறை அமைச்சகத்தின் செயலர் சார்பில், வழக்குரைஞர் அடுத்த விசாரணை யின் போது ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் பி.எம்.சிறீ திட்டத்தினை தமிழ்நாடு அரசு ஏற்காமல் இருப்பதால், சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 2,291 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருப்பதாகவும், இந்த தொகையை உடனடியாக, 6 சதவீத வட்டியுடன் விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தர விட கோரியும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் 12.8.2025 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அடுத்த விசாரணை நடக்கும்போது ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்தின் செயலர் தரப்பிலிருந்து வழக்குரைஞர் ஆஜராக வேண்டும்.
மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் தமிழ்நாடு அரசின் வழக்கை விசாரணைக்கு எடுத்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக்கூறிய நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.