பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம்! ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு

கான்பெர்ரா, ஆக.13- காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது, 2023 அக்டோபரில் மேற்காசிய நாடான இஸ்ரேல் தாக்குதலைத் துவங்கியது. போரை நிறுத்துமாறு பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இஸ்ரேல் – பாலஸ் தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்தாலும், இதுவரை பல நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க வில்லை.

இந்தச் சூழலில் காசா மீதான போரை நிறுத்த இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்து வருகின்றன.

குறிப்பாக அய்ரோப் பிய நாடுகள் பலவும் கடந்த சில வாரங்களாக இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் நேற்று முன்தினம் (11.8.2025) கூறியுள்ளதாவது:

பாலஸ்தீனிய அதிகார சபையிடமிருந்து ஆஸ்திரேலியா பெற்ற உறுதிமொழிகளின் அடிப்படையில், பாலஸ்தீன மக்களுக்கு ஒரு தனி நாடு இருப்பதற்கான உரிமையை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும்.

பாலஸ்தீன அரசில், ஹமாஸ் அமைப்புக்கு எந்தப் பங்கும் இல்லை என்று உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், காசாவில் நடக்கும் மோதல், துன்பம் மற்றும் பட்டினியை முடிவுக்கு கொண்டு வரவும், பாலஸ்தீன தனி நாடு என்ற முடிவே தீர்வாக இருக்கும்.

வரும் செப்டம்பரில் நடைபெறும், அய்.நா., பொதுச் சபையின் 80வது கூட்டத் தொடரில், பாலஸ் தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *