புதுடில்லி, ஆக.11 அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தில் எழுத்துபூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறியிருப்பதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 2-ஆவது ஆட்சி காலத்தில் இதுவரை 1,703 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 1,562 பேர் ஆண்கள், 141 பேர் பெண்கள். அதிகபட்சமாக பஞ்சாபைச் சேர்ந்த 620 பேரும், அரியானாவைச் சேர்ந்த 604 பேரும், குஜராத்தைச் சேர்ந்த 245 பேரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேரும் விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 2009 முதல் 2024-ஆம் ஆண்டு வரை 15,564 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், சில கெடுபிடிகளை அமெரிக்கா பின்பற்றியது. இதனால் இந்திய மாணவர்கள் விசா பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டு, மாணவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.
சர்வாதிகார ஆட்சி நடத்திட பிஜேபி திட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் தலைவர் காதர் மொகிதீன் குற்றச்சாட்டு

நாகப்பட்டினம், ஆக.11 சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார். நாகூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (10.8.2025) கூறியதாவது:
ஒன்றிய ஆளும் பாஜக அரசு அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்டு ஆட்சி செய்து வருகிறது.வாக்காளர் பட்டியலை ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை மட்டுமே திருத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், சட்டத்தில் இல்லாத சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் பீகாரில் மேற்கொண்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் ஒரே இடத்தில் 4,000 ஓட்டுகள் எப்படி வந்தன என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அதுகுறித்த விவரங்களை தர முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது முட்டாள்தனமாக உள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. நமது நாடு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நடக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பிரதமர் மோடி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதில் கூறவில்லை.
தற்போது பீகாரில் நடக்கும் செயல், நாளை தமிழ் நாட்டிலும் நடக்கலாம்? மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் விரும்பியதை சட்டமாக நிறைவேற்றி வருகிறார்கள்.
இந்தியாவில் சர்வாதிகார ஆட்சியை நடத்த பாஜக அரசு திட்டமிட்டு, இதுபோன்ற செயல்களை அரங்கேற்றி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று சொல்ல அனைத்துக் கட்சிக்கும் உரிமை உள்ளது. ஆனால், திமுக கூட்டணி தான் பலமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
