ரயில் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாதா? தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கேள்விக்கு அமைச்சர் பதில்

2 Min Read

புதுடில்லி, ஆக.10– ரயில் பயணக் கட்டணம் மிகவும் குறைந்த அளவிலேயே உயர்த்தப்பட்டது என்றும், எனவே உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைப்பதற்கு மறுபரிசீலனை செய்ய முடியாது என்றும் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி

நாடாளுமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு, கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதியில் இருந்து உயர்த்தப்பட்ட ரயில் கட்டணங்களால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டணத்தை குறைக்கும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். அவருடைய இந்த கேள்விக்கு ஒன்றிய ரயில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

அவருடைய பதில் வருமாறு:-

உலகின் பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ரயில் பயணக் கட்டணம் குறைவுதான். பயணிகளுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக ஒன்றிய அரசு ரயில்வேக்கு மானியம் வழங்கி வருகிறது. அந்தவகையில் 2023-2024ஆம் நிதியாண்டில் ரூ.60 ஆயிரத்து 466 கோடி மானியமாக வழங்கப்பட்டது. இது பயணிகளின் பயணச்செலவுக்கு ஆகும் தொகையில் 45 சதவீதமாகும்.

அதாவது ஒரு பயணி பயணம் செய்ய ரூ.100 ரூபாய் செலவு ஆகிறது என்றால் ரூ.55 மட்டும்தான் ரயில்வே வசூலிக்கிறது. மீதி 45 ரூபாயை ஒன்றிய அரசு ரயில்வேக்கு மானியமாக வழங்கிவிடுகிறது.

மானிய ஒதுக்கீட்டில்…

5 ஆண்டுகளுக்கு பிறகு  இந்த ஜூலை மாதம் 1ஆம் தேதியில் இருந்து ரெயில்வே கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. ஒரு கிலோ மீட்டருக்கு அரை பைசா முதல் இரண்டு பைசா வரை என மிகக் குறைந்த அளவிலேயே கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனாலும், பொது வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு 500 கி.மீ. வரை கட்டணம் உயர்த்தப்படவில்லை.

முன்பதிவு செய்து ஏ.சி. வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை-நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மின்சார ரயில் சேவைகள், புறநகர் ரயில் சேவைகளுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

கிலோ மீட்டருக்கு அரை பைசா முதல் இரண்டு பைசா வரை மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள சூழலில், கட்டண உயர்வை மறுபரிசிலனை செய்வது மானிய ஒதுக்கீட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மொத்த ரயில்வே சேவையில் பாதி அளவுக்கு மட்டுமே இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப் பட்டுள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *