விநாயகருக்கும் கடிவாளம்! விநாயகர் சிலைகளை இயற்கைப் பொருட்களால் செய்ய வேண்டும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்

2 Min Read

சென்னை, ஆக.9- விநாயகர் சிலைகளை இயற்கைப் பொருட் களால் மட்டுமே செய்ய வேண்டும் என்று மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிவருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொது மக்களாகிய நமக்கு பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு, ஏரி மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகின்றன.

அவற்றைப் பாதுகாக்க, விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்படி, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, நீர்நிலைகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும்.

இயற்கைப் பொருள்கள்

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத களிமண் போன்ற மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலை களை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்ற, மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.

நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில், வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன் படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது, சுற்றுச் சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசுகட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *