டாக்கா, ஆக 6- வங்கதேசத்தில், 2026 பிப்ரவரியில் அந்நாட்டின் பொது தேர்தல் நடத்தப்படும் என முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் தேர்தல்
வங்கதேசத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த 2024 ஜூலையில் அந்நாட்டின் மாணவர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் மூலம் அவரது ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முஹம்மது யூனஸ் தலைமையில், அந்நாட்டில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஜூலை புரட்சி என்றழைக்கப்படும் இந்தப் போராட்டங்கள் வெற்றிப் பெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தொலைக்காட்சி மூலம் இடைக்காலத் தலைவர் யூனுஸ் நாட்டு மக்களிடம் உரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது: “தேசியளவிலான பொது தேர்தலை அடுத்த ரமலானுக்கு முன்னதாக, 2026ஆம் ஆண்டில் பிப்ரவரியில் நடத்துமாறு, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு, இடைக்கால அரசின் சார்பாக நான் கடிதம் எழுதுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, வங்கதேசத்தின் பொது தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ரமலான் பிப்ரவரி 17 அன்று துவங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பு பொது தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
எதிர்க்கட்சிகள் வற்புறுத்தலால் முன்கூட்டியே தேர்தல்
ஆரம்பத்தில் ஜூன் 2026 என்று பரிந்துரைக்கப்பட்ட தேர்தல் தேதி, பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP), ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் தேசிய குடிமக்கள் கட்சி (NCP) உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி குழுக்களிடமிருந்து முகமது யூனுஸ் ஒருமித்த கருத்தைப் பெற்ற பிறகு திருத்தப்பட்டது. டாக்காவில் இருந்து பேசிய முகமது யூனுஸ், பிப்ரவரியில் ரமலானுக்கு முன் தேர்தலை திட்டமிட தேர்தல் ஆணையத்திடம் முறையாகக் கோருவதாகக் கூறினார். “இந்த முறை, நாம் அனைவரும் வாக்களிப்போம். யாரும் விடுபட மாட்டார்கள்.” என்று முகமது யூனுஸ் தொலைக்காட்சி உரையில் கூறி, புதிய ஜனநாயக சகாப்தத்தை தொடங்குவதாக உறுதியளித்தார்.