மன்னார்குடி, ஆக.3- திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று முன்தினம் (1.8.2025) அளித்த பேட்டியில் கூறியதாவது:
அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் முறையாக செயல்பட்டு வரும் எங்களை பார்த்து அரசியல் பேசுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இவரும் அரசியல்வாதி தானே. ஒரு அரசியல்வாதி அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவார்?
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், மேனாள் முதலமைச்ச ராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பவர் பொதுவெளியில் என்ன பேச வேண்டும், எதை பேச வேண்டும் என்பதை கூட எண்ணி பார்க்காமல், தனது தகுதிக்கேற்ப பேசாமல் நாகரிகமற்ற முறையில் ஒருமையில் பேசுகிறார்.
இது அரசியல்வாதிக்கு நல்லது அல்ல. பாஜவின் கைப்பாவையாக எடப்பாடி மாறியதை
அ.தி.மு.க.வினர் ஏற்க வில்லை.
அவர் மட்டும்தான் பாஜவுக்கு ஆதரவாக உள்ளார். எடப்பாடியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை கைப்பற்றி விடலாம் என பாஜ கனவு காண வேண்டாம்.
நமது நாட்டின் முக்கிய பதவியான தேர்தல் ஆணையத்திற்கு, ஆணைய தலைவர் பதவிக்கு மோடியும், அமித்ஷாவும், தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்து கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.