பீஜிங். ஜூலை 29- உலகம் முழுவதும் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான அணைகள் பூமியின் சுழற்சி அச்சு மற்றும் துருவங்களை ஒரு மீட்டர் அளவுக்கு நகர்த்தியுள்ளன என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவின் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்புகள், மனித செயல் பாடுகள் நம் பூமியில் ஏற்படுத்தும் தாக்கத்தின் தீவிரத்தை வெளிப் படுத்துகின்றன.
1835 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உலகம் முழுவதும் சுமார் 7,000 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகள் குடிநீர், மின் உற்பத்தி மற்றும் இயற்கை பேரழிவுகளைத் தடுத்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக கட்டப்பட்டாலும், அனைத்தும் நீர் சேமிப்பு என்ற பொதுவான கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன. இந்த நீர் சேமிப்பு, பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் எடையை அதிகரித்துள்ளது.
அமெரிக்க புவிஇயற்பியல் சங்கத்தின் (American Geophysical Society (AGU)) சஞ்சிகையில் ஜூலை 2025 இதழில் வெளி யிடப்பட்ட ஒரு கட்டுரை, 20ஆம் நூற்றாண்டில் உச் சத்தை எட்டிய அணை நீர் சேமிப்பானது, நமது பூமி சுழலும் அச்சில் இருந்து துருவங்களை கிட்டத்தட்ட ஒரு மீட்டர் அளவுக்கு நகர்த்தியுள்ளது என்று கூறுகிறது. இந்த நிகழ்வு ‘உண்மை துருவ அலைவு’ என்று அழைக்கப்படுகிறது.
புவி இயற்பியல் விளைவு
அணைகளின் கட்டுமானம் ஒப்பீட்டளவில் குறைந்த புவி இயற்பியல் விளைவுகளை ஏற்படுத்தினாலும், உலகம் முழுவதும் அவை பெருமளவில் கட்டப்படுவது கடல்நீர் மட்டங்களிலும் பரவலான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆராய்ச்சித் தலைவர் நடாஷா வலென்சிக், “இந்த ஆராய்ச்சி இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவதாக, மனித செயல்பாடுகள் நாம் வாழும் பூமியை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணர்த்துகிறது. இரண்டாவதாக, காலநிலை மாற்றத்தில் மனிதர்களின் செயல்கள் ஏற்படுத்தும் விளைவுகள், அதிலும் குறிப்பாக கடல்மட்டங்களில் ஏற்படுவது” என்று AGU அறிவியல் போர்ட்டலில் விளக்கமளித்துள்ளார்.
இந்த ஆய்வு, கடந்த 180 ஆண்டுகளில் கட்டப்பட்ட நவீன அணைகளை மய்யமாகக் கொண்டு மேற்கொள்ளப் பட்டது. உலகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள அணைகளில், 6,862 பெரிய அணைகள் மற்றும் அவற்றின் நீர் சேமிப்பு முறைகள் இந்த ஆய்வில் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
“துருவங்கள் ஒரு மீட்டர் நகர்வதால் புதிய பனியுகம் ஏற்படப் போவதில்லை என்பது தெளிவாகிறது,” என்று வலென்சிக் விளக்கினார். “கோள்களின் சில பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் கூடுதல் எடை, பூமியின் சுழற்சியில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை புரிந்து கொள்ள விரும்பினோம்” என்றும் அவர் கூறினார்.
துருவ நகர்வு
உலகெங்கிலும் உள்ள அணைகளிலிருந்து சேகரிக்கப் பட்ட தரவுகளைப் பயன்படுத் திய இந்த ஆய்வு, துருவப் பெயர்ச்சி அல்லது துருவ நகர்வை எவ்வளவு பாதித்தன மற்றும் அணைகள் கடல் மட்டங்களை எவ்வாறு பாதித்தன ஆகிய இரு கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றது. ஆராய்ச்சி குழுவின் கூற்றுப்படி, டஜன்கணக்கான பிற தரவுகளுடன், சேமிக்கப் பட்ட நீரின் அளவு மற்றும் அணைகளின் இருப்பிடத்தை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
பூமியின் வெளிப்புற அடுக்கில் கூடுதல் எடையைச் சுமத்தும்போது, அது பூமியின் காந்தப்புலம் அமைந்துள்ள உள் அடுக்கை விட வித்தியாசமாகச் சுழலும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இங்குதான் துருவங்களுக்கும் பூமியின் சுழற்சி அச்சுக்கும் இடையிலான வேறுபாடு ஏற்படுகிறது.
விஞ்ஞானிகள் அணைகள் கடல் மட்டங்களில் ஏற் படுத்தும் தாக்கத்தையும் ஆய்வு செய்தனர். “கடல்நீர் மட்ட உயர்வைக் கணக்கிடும் போது, நீர்த்தேக்கங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன,” என்று வலென்சிக் கூறினார்.
இருபதாம் நூற்றாண்டில் கடல் மட்டங்கள் சராசரியாக 12 முதல் 17 செ.மீ வரை உயர்ந்தன, ஆனால் அணைகள் அந்த அளவில் கால் பங்கைத் தடுத்து நிறுத்தின என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது. “உலகம் முழுவதும் கடல்நீர் மட்ட உயர்வு ஒன்றுபோல் சீராக நிகழவில்லை என்பதைக் கருத்தில் கொண்டால், இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும்,” என்று விஞ்ஞானி மேலும் கூறினார். “அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து, கடல் மட்ட உயர்வின் வடிவியல் மாறும். இது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சமாகும், ஏனெனில் இந்த மாற்றங்கள் மிகவும் குறிப்பி டத்தக்கதாக இருக்கலாம்.”