பீகாரில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ய நிர்ப்பந்திக்கும் தேர்தல் ஆணையம் பதவி விலகும் அரசு அதிகாரிகள்

1 Min Read

பாட்னா, ஜூலை 26 பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக பல்வேறு சித்து விளையாட்டுகளை அரங்கேற்றி வருகிறது. அதில் முதன்மையானது தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்படுவது ஆகும்.  வழக்கம் போல பாஜகவிற்கு ஆதரவாக இதில் இறங்கியுள்ள தேர்தல்  ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற  பெயரில், இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

அதாவது ஒரு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் சராசரியாக 23,000 வாக்காளர்களை நீக்கியுள்ளது. அதே போல குறிப்பிட்ட அளவில் தேர்தல் ஆணையம் சர்ச்சைக்குரிய வகையில் புதிய வாக்காளர்களை  சேர்த்துள்ளது. பாஜக – தேர்தல் ஆணையத்தின் இந்த கூட்டு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் மற்றும் பீகார் சட்டமன்றத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ய தேர்தல் ஆணையம் நிர்பந்தித்து வருவதால்  அரசு  அதிகாரிகள், தங்களது பதவிகளை விட்டு ஓட்டம் பிடித்து வருகின்றனர்.

பீகாரின் கதிகார் மாவட்டத்தில் உள்ள பர்சோய்  சட்டமன்ற தொகுதியின், தொகுதி மேம்பாட்டு அதிகாரி (BDO) துணைப்பிரிவு அதிகாரியால் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பதவி விலகிய அதிகாரி கூறுகையில், “முறைகேடு செய்ய நிர்பந்திக்கிறார்கள். இதற்கு மறுத்தால் 24 மணிநேர வேலை  வழங்கி, மனரீதியாக அழுத்தம் கொடுக்கிறார்கள்” என அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபோன்று நிறைய அரசு அதிகாரிகள் முறை கேடு செய்ய விரும்பாமல் விருப்ப ஓய்வில் சென்று விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *