விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் மதுரை ஆதீனத்தின் முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் உயர்நீதிமன்றத்தில் காவல்துறை மனு

1 Min Read

சென்னை, ஜூலை 24-  காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால் மதுரை ஆதீனத்துக்கு வழங்கப் பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல் துறையினர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஆதீனம் தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை செய்ய சதி

சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்க காரில் வந்த மதுரை ஆதீனத்தின்மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக மாநாட்டில் பேசிய ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும், பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆதீனத்துக்கு முன்ஜாமீனை வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அவர் காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி சென்னை காவல் துறையினர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நேற்று (23.7.2025) நடந்தது.

முன்ஜாமீன்

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் ஆர்.முனியப்பராஜ், மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார்.

எனவே அவருக்கு வழங்கப் பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினார். அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக மதுரை ஆதீனம் வரும் ஜூலை 30-க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *