ஹாலாங்பே, ஜூலை 20- வியட்நாமின் பிரபலமான சுற்றுலாத் தலமான ஹா லாங் பேயில் ஜூலை 19ஆம் தேதி நடந்த படகு விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர், மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளனர்.
வெண்டர் சீஸ் (Wonder Seas) எனும் சுற்றுலாப் படகு, 48 பயணிகளும் 5 சிப்பந்திகளும் கொண்டதாக இருந்தது. இதில் 20க்கும் மேற்பட்டோர் சிறுவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில், தென் சீனக் கடலை கடந்த விப்பா புயல் காரணமாக இடிமின்னலுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிற்பகல் 2 மணியளவில் வானம் திடீரென இருண்டு, தட்பமான காற்று, இடி மின்னல் மற்றும் கனமழை படகை கவிழ்த்ததாகக் கூறப்படுகிறது.
11 பேர் உயிருடன் மீட்கப்பட்ட னர், இதில் ஒருவர் 14 வயது சிறுவன், படகின் உட்பகுதியில் 4 மணி நேரம் சிக்கியிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் 15 மீனவர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோசமான படகு விபத்து
வியட்நாமிய பிரதமர் பாம் மின் சின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்தார். விபத்துக்கான காரணம் குறித்து தெளிவான விசாரணை நடத்தப்படும் என்றும், பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு, ஹா லாங் பேயில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிகவும் மோசமான படகு விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.