புதுடில்லி, ஜூலை 13– ஒன்றிய அரசின் பரிந்துறையின் படி மாநிலங்களவைக்கு 4 நியமன உறுப்பினர் பதவிக்கான அறிவிப்பை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார்.
மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மீதியுள்ள 12 பேர் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.அதில், கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை, சமூக சேவை, பத்திரிகையாளர் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை ஒன்றிய அரசு பரிந்துரை செய்யும். அதனை ஏற்று குடியரசுத்தலைவர், அந்த பட்டியலில் உள்ளவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக ஒப்புதல் வழங்கி அறிவிப்பார்.அவர்கள் மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பு வகிக்கும் குடியரசு துணைத்தலைவர் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பர். தற்போது, 4 பேருக்கு நியமன உறுப்பினர், பதவியை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு அறிவித்து உள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:
* மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கை அரசு தரப்பில் முன் நின்று நடத்திய வழக்குரைஞர் உஜ்வல் நிகம்.
* கேரளாவைச் சேர்ந்த கல்வியாளர் சதானந்தன் மாஸ்டர்.
* மேனாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா.
* வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகிய 4 பேரும் குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பு வகிக்கும் குடியரசு துணைத்தலைவர் முன்னிலையில் உறுப்பினராக பதவியேற்பார்கள்