புதுடில்லி, ஜூலை 13– அரசியல் மற்றும் மத நோக்கங்களுக்காகத் தேசியக் கொடியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் நாளை (ஜூலை 14) விசாரணைக்கு வருகிறது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்க உள்ளது.
தேசியக் கொடிக்கு உச்சபட்ச மதிப்பு அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தேசத்தின் கவுரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதைத் தடை செய்யும் சட்டம் 1971 மற்றும் இந்தியக் கொடி விதிகள் 2022 உள்ளிட்ட விதிப் பிரிவுகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மத நோக் கங்கள் மற்றும் அரசியல் கட்சிச் சின்னத்தில் பயன்படுத்துதல், தேசியக் கொடி மீது வாசகங்களை அச்சிடுதல் உள்ளிட்ட அரசியல் நோக்கங்களுக்காகத் தேசியக் கொடி பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனு கோரியுள்ளது.