நாகப்பட்டினம், ஜூலை 13– இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நாகையில் நேற்று (12.7.2025) அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொள்கை ரீதியாக நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தரும் சீட்டுகளை பெற்றுகொள்வோம். நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கூட்டணிக் கட்சியிடம் கேட்போம். கொடுத்தால் பெற்றுகொள்வோம். திமுக 7ஆவது முறையாக வெற்றிபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதிமுக, பாஜ இடையே அடிப் படையிலேயே முரண்பாடு உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று எடப்பாடி பேசி வருவது ‘அத்தைக்கு மீசை முளைக்கும்’ என்பது போல் உள்ளது. பாஜ தலைமையிலான அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க ஒரு போதும் வாய்ப்பு இல்லை. எடப்பாடி அரசியலில் விதண்டவாதம் பேசுவதில் வல்லவர் என்பதை அவரது சுற்றுப்பயணத்தில் நிரூபித்து வருகிறார். இவ்வாறு கூறினார்.