சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாதபடி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டுவது காலத்தின் கட்டாயம். நீர்மின் திட்டங்கள் இதற்குப் பெரிய அளவில் உதவும். ஆனால், இதற்கென பெரிய அணைகள் கட்டுவது அதிக செலவு வைக்கும்.
அதேபோல, கடல் அலைகளில் இருந்து மின்சாரம் எடுப்பதும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் விஷயமல்ல. எனவே, மழையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதுவழி தற்போது பிரபலமாகி வருகிறது.
2 மில்லி மீட்டர்
சிங்கப்பூர் தேசிய பல்கலை.யைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதில் ஒரு புதிய முறையை வடிவமைத்துள்ளனர். ஆய்வாளர்கள், 32 சென்டிமீட்டர் உயரமும் 2 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டியூப்பை எடுத்துக் கொண்டனர்.
இந்த டியூப் மின்சாரத்தைக் கடத்துகின்ற பாலிமரால் ஆனது. இதன் மீது ஓர் உலோக ஊசியைப் பொருத்தினர்.
ஊசி மீது விழும் மழைத்துளி பல சிறு துளிகளாகப் பிரிந்து குழாய்க்குள்ளே செல்லும். அப்படிச் செல்லும் போது, காற்றுடன் இணைந்து மின்சாரம் உற்பத்தியாகும்.
பாதிப்பு ஏற்படாது
இந்த மின்சாரத்தை வைத்து 12 எல்இடி விளக்குகளை 20 நொடிகளுக்கு எரிய வைக்க முடியும்.
ஆகவே, இது மிக எளிமையான வழி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற பல டியூப்களை இணைத்து வைத்து ஒரு வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.
நகரப் பகுதிகளில் வீட்டு மேற்கூரைகளின் மீது மழை பொழியும்போது, இந்த முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இதனால், எந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது.