காலாவதியான மருந்துகளை கழிப்பறையில் வீசி அப்புறப்படுத்துங்கள் மருத்துவ பாதுகாப்பு ஆணையம் சி.டி.எஸ்.சி.ஓ அறிவுறுத்தல்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 10- ‘காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாமல் இருக்கும் 17 வகையான மருந்துகளை குப்பைத் தொட்டியில் வீசுவது, பிற உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என எச்சரித்துள்ள சி.டி.எஸ்.சி.ஓ., அவற்றை கழிப் பறையில் வீசி தண்ணீர் ஊற்றி அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளது. பொதுவாக நாம் வாங்கும் மருந்துகளில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும்.

மருந்து அட்டையில் மேல்பகுதியில் குறிப்பிடப் பட்டுள்ள அந்த தேதிக்கு பின், அந்த மருந்தை பயன்படுத்தினால் பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தும் ஏற்படக்கூடும். அந்த வகையில், 17 மருந்துகளின் பட்டியலை சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.

பெரும்பாலும் வலிநிவாரணி, பதற்றம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படும், ‘டிரமடால், டேபென்டாடோல், டயாசிபாம், ஆக்சிகோடோன், பென்டானில்’ போன்ற மருந்துகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த, 17 வகையான மருந்துகள் காலாவதியான பின் அல்லது பயன்படுத்தப்படாத நிலையில் அவற்றை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை, சி.டி.எஸ்.சி.ஓ., வெளியிட்டுள்ளது.

குப்பையில் வீசுவதின் அபாயம்

காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத இந்த, 17 வகை மருந்துகளை குப்பை தொட்டியில் வீசும்போது, அவை குப்பை அள்ளும் தொழிலாளர்கள் அல்லது குழந்தைகள் கைகளில் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

மேலும், கால்நடைகள் மற்றும் சாலையில் சுற்றித்திரியும் விலங்குகளின் வயிற்றுக்குள் அந்த மருந்து செல்ல வாய்ப்பு அதிகம். அதோடு அந்த மருந்துகள் மறுவிற்பனைக்காக மீண்டும் கள்ளச்சந்தைகளுக்கு வரக்கூடிய அபாயமும் உள்ளன. எனவே இந்த மருந்துகளை குப்பை தொட்டியில் வீசுவதை தவிர்த்து, அவற்றை உடைக்காமல் கழிப்பறைக்குள் வீசி தண்ணீர் ஊற்றி அப்புறப்படுத்துவது அவசியம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *