இணைய வழி நிதி மோசடியை தடுக்க காவல்துறை, வங்கி அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்  ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

2 Min Read

சென்னை, ஜூலை 10  இணையவழி நிதி மோசடியை முற்றிலும் தடுக்க சைபர் க்ரைம் காவல்துறையினர் வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாநில அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இணையவழி நிதி மோசடி

‘சைபர் குற்றவாளிகள்’ பொது மக்களின் கோடிக் கணக்கான பணத்தை சுருட்டி விடுகின்றனர். இதுபோன்ற இணையவழி நிதி மோசடி மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் சைபர் க்ரைம் காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகளிடையே நேற்று (19.7.2025) நடைபெற்றது.

சென்னை அசோக் நகரில் உள்ள மாநில சைபர் க்ரைம் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சந்தீப் மித்தல் தலைமை தாங்கினார். இந்தியா முழுவதிலும் இருந்து 34 முக்கிய வங்கிகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான கணக்குகளை முடக்குவதில் சரியான நேரத்தில் உதவுவதற்காக சைபர் க்ரைம் தலைமையகத்தில் வங்கி பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும், விசாரணைக்கு உதவுவதற்காக வங்கிகளின் தரவுகளை மேம்படுத்த வேண்டும், போலி கணக்குகளை அடையாளம் காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் சைபர் நிதி மோசடியை தடுக்க காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், போலி வங்கி கணக்குகளை அடையாளம் கண்டு அவற்றை முடக்க வேண்டும் என காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சந்தீப் மித்தல் வலியுறுத்தினார். மேலும், இக்கூட்டத்தில் சைபர் குற்றம் நடைபெற்று விட்டால் அதுதொடர்பாக புகார் அளிக்கும் வகையில் 1930 என்ற எண் பொது மக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் விழிப்புணர்வு செய்ய வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வங்கக்கடலில் காற்று சுழற்சி;  தமிழ்நாட்டில் மழை தொடரும்

 வானிலை ஆய்வாளர்கள் தகவல்

சென்னை, ஜூலை 10 மேற்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், காற்றை குளிர்விக்கும் காற்று சுழற்சிகள் வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவாகும் வாய்ப்புள்ளதாலும் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக எதிர்பார்த்த வகையில் வடகடலோரத்தில் இரண்டு நாட்களாக மழை பெய்துள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பகுதியில் இருந்து ஒரு காற்று சுழற்சி வந்து இங்கு இணையும் வாய்ப்பும் உள்ளது. அதனால் மழை பொழிவு தீவிரம் ஆகும். பின்னர் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றும் இணைந்து குளிர்விப்பு அதிகரித்து 14ஆம் தேதிக்கு பிறகு 20ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யும். காற்றை குளிர்விக்கும் வகையில் காற்று சுழற்சிகள் வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதனால் வடக்கு மாவட்டங்கள் தொடங்கி தென் மாவட்டங்களுக்கும் படிப்படியாக மழை பெய்யத் தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *