சுயமரியாதை இயக்கமும்
இராமானந்த சட்டர்ஜீயும்
இராமானந்த சட்டர்ஜீயும்
சமீபத்தில் விருதுநகரில் நடந்த 3-வது சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களில் மதங்களைப்பற்றிச் செய்யப்பட்ட தீர்மானத்தைப்பற்றி அதாவது, “மதத்தின் பேரால் அனுஷ்டிக்கப்படும் பழக்கங்களும் பயிற்சிகளும் சமுக சீர்திருத்தத்திற்குத் தடையா யிருந்து வருவதால், மதங்கள் ஒழியவேண்டும் என்றும் மதங்கள் ஒழியாமல் சகோதரத்துவம் ஏற்படாதென்றும், மதச்சண்டை ஒழியவேண்டுமானால் மக்களுக்குள் மதத்தைப் பற்றிய உணர்ச்சி ஏற்படுவதை நிராகரிக்க வேண்டுமென்றும் செய்யப்பட்ட தீர்மானத்தின் மீது வங்காளத்தில் வெகுகாலமாய் நடைபெற்றுவரும் மாடர்ன்ரிவ்யூ” என்னும் பிரபலபத்திரிகையின் ஆசிரியராகிய உயர் திரு இராமானந்த சட்டர்ஜீ அவர்கள் மேற்படி பத்திரிகையில் சில ஆட்சேபனைக் குறிப்புகள் எழுதியிருக்கிறார்.
அதன் சாராம்சமாவது:
“மக்களுக்குள் எப்பிரிவினராயினும் சுயமரியாதையைப் பெற விரும்புவரேல் அதற்கு ஒவ்வொருவரும் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் சுயமரியாதைக்காரர்களின் தீர்மான விஷயத்தில் நாம் பின்வருமாறு நினைப்பது தவறாயிருந்தால் திருத்த வேண்டுமாய் கோருகிறோம். தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தார் சொல்லும் எல்லாக் கொள்கைகளிலும் நியாயமிருகின்றதென்று நம்மால் ஒப்புக் கொள்ளமுடியவில்லை. விருதுநகர் மகாநாட்டின் தலைவர் திரு.ஆர்.கே. சண்முகம் அவர்கள் பேசியதாக நமக்கு எட்டிய செய்தியில், இந்தியாவில் மதம் என்று சொல்லப்படும் பலம் பொருந்திய ஸ்தாபனம் மக்கள் முற்போக்கிற்குத் தடையாகயிருந்து வருகின்றது” என்று பேசியிருக்கின்றார்.
இதை அனுசரித்து மதங்கள் மறையவேண்டும் என்பதாக ஒரு தீர்மானமும் அம்மகாநாட்டில் செய்யப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து சுயமரியாதைக்காரர்களின் நோக்கம் தெளிவாக விளங்குகின்றது.
1931 ஆகஸ்டில் நடைபெற்ற விருதுநகர் 3ஆவது சுயமரியாதை வாலிபர் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்
1 சமதர்ம தத்துவமும், பொதுவுடைமைக் கொள்கையும் நாட்டில் ஓங்கவேண்டும் என்பதே நமது லட்சியமாயிருக்கின்றபடியால், விதி, கடவுள் செயல் என்பன போன்ற உணர்ச்சிகள் மக்கள் மனத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
2. மக்கள் யாவரும் ஒன்றுபட வேண்டுமானால், மதப் பிரிவுகளும் மத சம்பந்தமான பழக்க வழக்கங்களும் ஒழிய வேண்டும்.
3. வருணாசிரமத்திலும், கடவுள் செயலென்பதிலும் நம்பிக்கை கொண்டிருக்கிற யாராலும், மக்களுக்குச் சமத்துவமும் விடுதலையும் அடையும்படிச் செய்யமுடியாது என்று இந்த மாநாடு உறுதியாகச் சொல்லுகிறது.
4. பெண்களுக்கு ஆண்களைப் போலவே எல்லா உரிமைகளும் வழங்கப் பட்டாலொழிய பெண்கள் விடுதலை ஏற்படாதென்று இந்த மாநாடு கருதுவதால். எல்லாத் துறைகளிலும் பெண்களுக்குச் சமத்துவம் கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது.
5. ஸ்தல ஸ்தாபனங்களிலும், பொதுக்குளம், பொதுப் பள்ளி, பொதுவழி முதலியவைகளிலும் சுயமரியாதை உணர்ச்சியுடைய இளைஞர்கள் அடையவேண்டிய உரிமைக்காகக் கூடிய விரைவில், திருச்சி பெரம்பலூரில் தாழ்த்தப்பட்ட மக்களால் ஆரம்பிக்கப் போகும் சத்தியாக்கிரக இயக்கத்திற்கு அதில் நம்பிக்கையுள்ளவர்கள் வேண்டிய ஆதரவு கொடுக்கவேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
6. பெண்கள் விடுதலைக்கும், அறிவுப் பயிற்சிக்கும் பிள்ளைப் பேறு தடையாயிருப்பதாலும், எதிர்காலத்தில் நாகரிக வளர்ச்சிக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளப்போகும் குழந்தைகளைப் போதிய போஷாக்குடனும். கல்வியுடனும் வளர்க்க வேண்டியதவசியமானதாலும் பிள்ளை பேற்றை அவரவர்கள் தங்கள் தேக நிலை, பொருள் நிலை, அறிவு நிலைமைகளுக்குத் தக்கவாறு அடக்கியாள வேண்டுமென்று இம்மாநாடு கருதுவதோடு, கர்ப்பாட்சிக்கு வேண்டிய சாதனங்களையும் முறைகளையும் பற்றிய அறிவைப் போதிக்கத்தக்க ஸ்தாபனங்களை அரசாங்கத்தாரும். பொதுநல சேவைக்காரரும் ஏற்படுத்த வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
திரு.ஷண்முகம் இந்தியாவின் நிலையை பற்றி பேசியதால் இந்தியாவின் பண்டைகால மத நிலையைப்பற்றி சற்று ஆராய்வோம்’ என்று ஆரம்பித்து,
முற்காலத்தில்
‘வேதங்களை ஏற்படுத்திய ரிஷிகளும், அது யாருக்கு ஏற்படுத்தப்பட்டதோ அவர்களும் பிறவியில் பிராமணர்களாயில்லாமலிருந்தும் அனைவராலும் பிராமணர்கள் என்றே கருதப்பட்டிருக்கின்றார்கள்.
பிரம்மத்தை வழிபடுபவர்கள் என்ன காரணத்தாலே பலர் பிராமணரானார்கள். கீதாச்சாரியாரும் கீதை கேட்டவரும் பிராமணராக கருதப்பட்டார். ஆதலால் மக்கள் சீர்த்திருத்தமடைய அக்காலத்தில் மதம் தடுக்கவில்லை.
மத்திய காலத்தில்
புத்தரால் “புத்த மதம் ஜாதி முறையைத் தகர்த்தது, நானக்கரும் குருகோவிந்தரும் தாழ்ந்தோர்களை உயர்த்தி அவர்களைச் சகோதரர்களாக்கினார்கள். வங்காளத்தில் சைதன்னியர் முஸ்லிம்கள் உள்பட பலரை ஜாதி, மத பேதமின்றி சிஷ்யராக்கிக் கொண்டார். கபீர்தாஸ் பல உயர்ந்த உபதேசங்களைச் செய்திருக்கிறார்.”
தற்காலத்திலும்
ராஜராம் மோகன்ராய் பிரம்மசமாஜத்தை உண்டாக்கினார். கேசப் சந்திரசேனர் அதை விருத்தி செய்தார். ஜாதியை விடவேண்டுமென்றும் சொன்னார். தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜம் உண்டாக்கினார். ஈÞவர் சந்திர வித்தியாசாகர் விதவாவிவாகத்தைப் புகுத்தினார். வீரேசலிங்கம் பந்துலு சமுக சீர்திருத்தம் செய்தார். விவேகானந்தர் அரிய உபதேசங்களைச் செய்தார். மகாத்மா காந்தி பிராமணர் பிராமணரல்லாதாருக்கு ஒரே மாதிரி போதிக்கிறார். ரவீந்தர நாதர் ஒரு பெரியார். இவர்கள் எல்லோரும் செய்த காரியங்கள் மதவுணர்ச்சியை நீக்கி செய்யப்பட்டவைகளல்ல. இப்படியிருக்க இனி மத நம்பிக்கையில்லாதவர்கள் செய்தகாரியம் என்ன என்பதையோசனைசெய்து பார்க்கட்டும், சுயமரியாதைக்காரர்ருஷியாவைப் பின்பற்றுவதாகத் தெரிகின்றது அங்கும் மதம் அடியோடு அற்றுப்போகவில்லை” என்பவை கருத்தாக எழுதியிருக்கிறார்.
‘‘தென்இந்திய சுயமரியாதைக்காரர்கள் ரஷ்யாவை பார்க்கிறார்கள்” என்று எழுதி இருப்பதைப்பற்றி சுயமரியாதைக்காரர்கள் அவமான மடையவில்லை. ஏனெனில் ரஷ்யா எவ்வித இழிவான வேலையையும் மகாபாதகமான வேலையையும் செய்வதாக நாம் கருதவில்லை. ஒரு சமயம் ரஷ்யா முட்டாள்தனமான வேலை செய்வதாக வேண்டுமானால் சொல்லிக்கொள்ளட்டும்; முட்டாள்தனமான காரியம் சூழ்ச்சியான வேலையைவிட கெட்ட காரியமாகி விடாது.
இவற்றிற்கு நாம் சமாதானம் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். திரு.இராமாநந்த சட்டர்ஜீ அவர்கள் ஒரு உண்மை சீர்திருத்தவாதி என்பதாகவே நாம் கருதி இருக்கின்றோம். சுயமரியாதை மகாநாட்டுக்கு அவரைத் தலைமை வகிக்கச் செய்ய வேண்டுமென்று ஒரு பிரச்சினைகூட இருந்து வந்தது யாவருக்கும் தெரிந்ததேயாகும். ஆகவே, அவரது நல்லெண்ணங்களில் நமக்குச் சந்தேகங்கொள்ள இதுவரையில் எவ்விதத்திலும் இடமில்லை. ஆனால், திரு. சட்டர்ஜீ அவர்களால் சொல்லப்பட்ட விஷயங்கள் மக்களுக்குள் ஒருசெல்வாக்குப் பெற்ற அபிப்பிராயமும் சிறிதும் யோசித்துப்பார்க்காமல் சப்த மாத்திரத்திலேயே ஒப்புக்கொள்ளக் கூடிய அளவுக்கு பழக்கமும் விளம்பரமும் கொண்டதாகும்.
ஆதலால் அவ்வபிப்பிராயங்கள் கொள்கின்றவர் களுக்கெல்லாம் உள் எண்ணம் கற்பிக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ளுகின்றோம். ஆனால்,
முற்காலம்
திரு.சட்டர்ஜீ அவர்கள் காட்டிய முற்கால கதைகளை அப்படியே ஒப்புக்கொண்டு பார்த்தாலும் கூட முற்காலத்தில் ரிஷிகள், தீர்க்க தரிசிகளான பெரியார்கள், கீழ் ஜாதியிலிருந்து பிராமணர்களாகப் பாவிக்கப்பட்டவர்கள் என்பவர்கள் எல்லோருமே மதத்தினாலேயே அந்நிலையை அடைந்தார்கள் என்றாலும் தனித்தனி மனிதர்கள் என்கின்ற முறையில் தனித்தனியான ‘தெய்வீக’ அதாவது மனித சக்திக்கு மீறியதான காரியங்கள் செய்தவர்கள் என்கின்ற நம்பிக்கை காரணத்தினால் தான் பெரியவர்களானார்கள் என்பதோடு அந்த மாதிரி தெய்வீக சக்தி என்பது அவர்களிடம் இருக்கின்றது என்று பாவிக்கப்பட்ட காரணமே அவர்கள் பெரியவர்களாவதை, ஆனதை யாராலும் தடுக்க முடியாமல் செய்து விட்டதே தவிரமற்றபடி யெல்லோருக்கும் அந்த முறை பயன் பட்டதாக இல்லை என்றும் இப்போதும் எல்லோருக்கும் பயன்படாதென்றும் சொல்லுகின்றோம்.
மத்திய காலம்
மத்திய காலத்தில் பல பெரியார்கள், பல சீர்திருத்தங்கள் செய்திருக்கின்றார்கள் என்றால் அவற்றுள் புத்தர் ஒருவர் செய்த சீர்திருத்தத்தால் தான் இன்று அனேகமக்கள் ஒன்றுபட்டிருப்பதைக் காணலாம். ஆனால் புத்தர் ஒரு கடவுளையோ ஒரு மதத்தையோ ஆதாரமாய் வைத்துக் கொண்டு தனது சீர்திருத்தத்தைச் செய்தார் என்று சொல்லி விடமுடியாது. ஆதலாலேயே அவர் சுயமரியாதைக்காரர்கள் போல் இந்துக்கள் முதலிய எல்லா மதக்காரர்களாலும், இந்துக்களின் புராண இதிகாசங்களாலும், நாத்திகர் என்றும், மதமற்றவர் என்றும் இன்றும் சொல்லப்பட்டேவருகிறார்.
1931 ஆகஸ்டில் நடைபெற்ற விருதுநகர் இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள்
1. பெண்களின் கல்வியை 11 வயதிலேயே நிறுத்தி விடாமல் பெண்களை 30 வயது வரை படிக்க வைக்கவேண்டும்.
2. கவர்ன்மெண்டார் சாரதா சட்டத்தை எல்லாப் பிரதேசங்களிலும் உடனே அமலுக்குக் கொண்டு வரவேண்டும்.
3. பெண்களை வைத்தியத் தொழிலுக்கும், உபாத்திமைத் தொழிலுக்கும் மாத்திரம் தற்பொழுது எடுப்பது போதாது. அவர்களைப் போலீஸ் இலாகாவிலும், இராணுவத்திலும் சேர்க்கவேண்டும்.
4. விதவா விவாகத்தை இம்மாநாடு ஆதரிக்கிறது.
5. பெண்களுக்கு ஆண்களைப் போல் சொத்துரிமையில் சமத்துவமளிக்கவேண்டும்.
6. பெண்களுக்குக் கணவர்கள் பிடிக்காவிடில், மேற்படி கலியாணத்தை ரத்துச் செய்ய விவாகரத்துச் சட்டம் வேண்டும்.
7. தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை உடனே அமலுக்குக் கொண்டு வரவேண்டும். விபச்சார விடுதிகளை ஒழிக்கவேண்டுமென்றும் இம்மாநாடு அபிப்பிராயப் படுகிறது.
8. இராஜதானியில் அநேக மத்திய இடங்களில் மருத்துவப் பயிற்சி கொடுக்கக்கூடிய பள்ளிகள் திறக்கப்படவேண்டும்.
9. சென்னையில் அனாதை சம்ரக்ஷணாலயம் ஒன்றை ஸ்தாபிக்க நிதி வேண்டுமென்று சென்னை விஜிலன்ஸ் சங்கத்தார் கோரியுள்ள வேண்டுகோளை வரவேற்கிறது.
10. கோயில்களில் பொட்டுக் கட்டுதலைத் தடுப்பதுடன், அதற்கு உடந்தையாயிருப்பவர்களை மாஜிஸ்டிரேட்டுகளிடம் காட்டிக்கொடுக்க வேண்டுவதுடன், தேவதாசி வழக்கத்தை வைத்துக்கொண்டுள்ள கோயில்களைப் பகிஷ்கரிக்கவேண்டும்.
11. பள்ளிக்கூடங்களில் சேரும் மாணவர்களுக்கு மனு பாரங்களில் ஜாதி முதலானவைகளைக் காட்ட வேண்டுமென்ற வழக்கத்தை நிறுத்திவிட் வேண்டுமென்று அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறது.
12. வர்ணம் அல்லது ஜாதி ஹாஸ்டல்கள் இருந்து வரும் வழக்கத்தை ஆட்சேபிப்பதுடன், அத்தகையவைகள் உள்ள பள்ளிக்கூடங்களுக்குக் கிராண்டு முதலானவைகள் கொடுப்பதை மறுக்கவேண்டுமென்று கல்வி அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறது.
13. பொதுவாகத் தங்கும் அறைகள் உள்ள எல்லா ரயில்ளே ஸ்டேஷன்களிலும், ஸ்திரீகளுக்கென்று பிரத்தியேகமான அறைக ஒதுக்கப்படுவதுடன், பகலிலும் இரவிலும் ஸ்திரீ வேலைக்காரிகள் அங்கு தயாராயிருந்து வரவேண்டுமென்று வற்புறுத்துகிறது.
கர்ப்ப ஆட்சி விஷயமாய் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மற்றபடி நானக், குரு கோவிந்தர், கபீர், சைதன்னியர் முதலியவர்களும் சீர்திருத்தம் செய்யப்புறப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர அவர்களது உபதேசங்கள், முயற்சிகள் ஆகியவைகள் மக்களில் சிறு சிறு கூட்டம் கொண்ட பல பல பிரிவுகளை. உண்டாக்கிற்று என்பதைத் தவிர இந்திய பொது மக்களுக்கு என்ன சீர்திருத்தம் செய்தது என்பது நமக்கு விளங்கவில்லை.
ஒவ்வொரு பெரியார் என்பவர்களின் பேரால் ஒவ்வொரு கூட்டம் தனித்து இருந்து கொண்டு மற்றக் கூட்டத்தினிடம் அதிருப்தியுடன் வாழ்ந்து வருகின்றன என்பதைப் பிரத்தியட்சமாய்க் காண்கின்றோம்.
தற்காலம்
ராஜாராம்மோகன் ராய் அவர்களால் செய்யப்பட்ட சீர்திருத்தத்தின் பயனாய் சிற்றில இடங்களில் மாத்திரம் பிரம்ம சமாஜம் என்னும் பேரால் சில லட்சம் பேர்களும், தயானந்த சரஸ்வதி, அவர்களால் செய்யப்பட்ட சீர்திருத்தத்தின் பயனாய் ஆரிய சமாஜத்தின் பேரால் சில இடங்களில் சில லட்சம் பேர்களும் ஒரு தனித்தனிப் பிரிவினராக இருந்து வருகிறார்கள்.
விவேகாநந்தர் உபதேசம் எவ்வளவு மேன்மையானது என்று சொல்லப்பட்டாலும் அது பெரும்பாலும் தர்க்கவாதத்திற்கு இந்தியப் புராதனப் பெருமையைப் பேசுகின்ற சந்தோஷ சமயத்திற்கும் மாத்திரம் பயன்படுவதன்றி காரியத்தில் என்ன பயன் ஏற்பட்டது என்பதைச் சென்னை மைலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா ஹோமை போய்ப்பார்த்தால் விளங்கும்.
அதாவது, ஊராரிடம் பணம் பறித்து பிள்ளைகளுக்குப் பட்டை நாமமும், சாம்பலும் பூசப்பட்டு தனித்தனி அறைகளில் உட்கார வைத்து சாப்பாடுபோட்டு, ஜாதி வித்தியாசம் கற்பிக்கப்பட்டு உயர்வு தாழ்வு நிலை நிறுத்தப்பட்டுவருகிறது, திரு. காந்தி அவர்கள் பிராமணருக்கும், பிராமணரல்லாதாருக்கும் செய்யும் உபதேசம் தென்னிந்திய பிராமணரல்லாதாரால் எப்படி கருதப்பபடுகிறது என்பதும், காந்தி அவர்கள் மக்களை எந்தக்கால உலகத்திற்கு கொண்டுபோக பாடுபடுகின்றார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தென்னிந்தியாவில் உள்ள காந்தி சீடர்களில் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் திரு. காந்தியை மத சம்பந்தமான விஷயங்களில் ஏற்றுக்கொள்ளுகின்றார்களா? என்பதும் நடு நிலைமை விசாரணை செய்து பார்த்தால் உண்மை விளங்கும்.
அன்றியும் அவரது சீர்திருத்த உபதேசம் இன்றைய கெடுதிகளில் எதை மாற்றக்கூடிய தாயிருக்கின்றது என்ற விஷயத்தை முடிவு செய்ய திரு. சட்டர்ஜீ அவர்களுக்கே விட்டு விடுகின்றோம்.
ஆகவே, முற்காலம் – மத்தியகாலம் – தற்காலம் என்று சொல்லப்பட்டகாலங்களில் எத்தனையோ பெரியார்கள் ஏற்பட்டு மதத்தின் பேரால் அல்லது மதத்தைத் தள்ளிவிடாமல் மத உணர்ச்சியால் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் எனப்பட்டவைகள் செய்த காரியங்கள் என்னவாய் இருந்த போதிலும் இச்சீர்திருத்தவாதிகள் தோன்றுவதற்கு முன் இந்தியா இருந்த நிலைமையைவிட இன்று என்ன துறையில் எவ்வித மாறுதல் அடைந்திருக்கின்றது என்கின்ற தான பிரத்தியட்ச அனுபவங்களைக் கொண்டுதான் நாம் மதத்தைச் சேர்த்து செய்யப்படும் சீர்திருத்த வேலைக்கும் மதத்தை நீக்கி செய்யப்படும் சீர்திருத்த வேலைக்கும் வித்தியாசங்கள் பார்க்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
திரு.சட்டர்ஜீ அவர்கள் எடுத்துக்காட்டிய பெரியார்களின் வாழ்க்கைக் கொள்கையை இன்று ஒப்புக்கொண்டு நடக்கும் மக்கள் எத்தனை பேர்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள் என்பதை கவனிக்குமுன், இப்பெரியார்களைப் பெரியார்களாக, தெய்வாம்சம் பொருந்தியவர்களாகக் கருதி வணங்கும் மக்களில் ஆயிரத்தில் ஒருவராவது அவர்களது கொள்கையை ஒப்புக் கொண்டு நடக்கிறார்களா? என்று கேட்கின்றோம். இதற்குக் காரணம் மதமா? அல்லது அப்பெரியார்களின் மீதுள்ள அலட்சிய புத்தியா? அல்லது மனிதனின் முட்டாள் தனமா? என்றும் தெரிய விரும்பு கிறோம்.
முற்கால, மத்தியகால, தற்கால, தெய்வீகப் பெரியார்கள், தீர்க்கதரிசிகள், சுவாமிகள் மகாத்மாக்கள் ஆகியவர்கள் மதத்தின் பேரால் செய்துவந்த சீர்திருத்த வேலையின் பலனை ஒரு வாக்கியத்தில் அடக்க வேண்டுமானால் இந்தியாவில் இந்து மதத்தின் பேரால் எத்தனை ஆயிரம்ஜாதிகள்? எத்தனை லட்சம் பிரிவுகள்? எத்தனை கோடி தீண்டக்கூடாத, கிட்டவரக்கூடாத கண்ணில் தென் படக்கூடாத மக்கள், எத்தனைப் பத்துக் கோடி கீழ் ஜாதி, ‘சூத்ரஜாதி’ மக்கள்? எத்தனை பத்துக் கோடி தற்குறிகள்? என்பவற்றைக் கவனித்து பார்க்கும்படி திருசட்டர்ஜீ அவர்களை வணக்கமாய்க் கேட்கின்றோம்.
திரு. சட்டர்ஜீ அவர்களால் எடுத்துக் காட்டப்பட்ட பெரியார்களில் யாராவது நாம் சொல்லும் மதத்தை அடியோடு ஒழித்து வேலை செய்திருப்பார்களானால் அப்பெரியார்கள் வேலை வெற்றி பெற்று இருக்குமானால், வெற்றி பெற அறிஞர்கள் உதவி இருப்பார்களானால் இன்று நாம் மேல் எடுத்துக்காட்டியதான இத்தனை ஆயிரக்கணக்காகவும், லட்சக்கணக்காகவும், கோடிக்கணக்காகவும், பத்துக் கோடிக்கணக்காகவும் வித்தியாசங்களும் மேல் கீழ் படிகளும், மாச்சரியங்களும் இழிவுகளும், கொடுமைகளும், காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சிகளும் இருந்து வருமா? என்று பின்னும் பின்னும் வணக்கமாய் கேட்கின்றோம், மதத்தில் ஆழ்ந்திருக்கும் எண்ணமானது அதன்பயனாய் எற்பட்ட இவ்வளவு பயங்கரமான பலன்களையும் அலட்சியமாய் எண்ணியிருக்கும்படி மனதை அவ்வளவு இரும்பாக்கிவிட்டது.
மேலும் திரு. சட்டர்ஜீ அவர்கள் மதத்தில் நம்பிக்கை அற்றவர்கள் இதுவரை என்ன செய்திருக்கின்றார்கள்? என்று ஒரு கேள்வி கேட்கின்றார். அது மிகவும் சரியான கேள்வியேயாகும். ஆனால் மத நம்பிக்கை அற்றவர்களின் வேலையானது எப்படி இருந்த போதிலும் மதநம்பிக்கை உள்ளவர்கள் வேலையின் பயன் அவர்கள் செய்யும் வேலையின் சவுகரியத்தைப் போல அவ்வளவு சுலபமான வேலையாயில்லை.
ஏனெனில் முற்சொன்னவர்களது வேலையானது திரு ராமானந்த சட்டர்ஜீ போன்ற பெரியார் முதல் கொண்டு அதிருப்தி படவேண்டியதும், சங்கடப்பட வேண்டியதுமான ஒரு எதிர்நீச்சல் வேலையாய் இருக்கின்றது. இவ்வேலை செய்பவர்களோ, பெரியார்கள், சீர்திருத்தக்காரர்கள், அறிஞர்கள், கற்றவர்கள், செல்வவான்கள், ஏழைகள், ‘பெரிய ஜாதியார்கள்’ ‘இழிமக்கள்’ என்று சொல்லப்பட்டவர்கள் எல்லோராலும் வெறுக்கப்பட வேண்டியவர்களாகவும் எதிர்க்கப்பட வேண்டியவர்களாகவும் இருக்கவேண்டிய வர்களாய் இருக்கின்றார்கள். மதத்தினால் தங்கள் தங்கள் யோக்கியதைக்கு மீறின சவுகரியமும், மேன்மையும் அடைந்து வருகின்றவர்கள் மாத்திரமல்லாமல் கஷ்டமும் இழிவும் அடைகின்றவர்களும் தங்களை இக்கெதிக்கு ஆளாக்கியதின் பயனை அனுபவிக்கின்றவர்களுடன் சேர்ந்து கொண்டு நம்மை நமது வேலை நடக்க வொட்டாமல் தடுக்கின்றார்கள். என்றால் மதத்தின் கொடுமைக்கு வேறு எதை சமானமாகச் சொல்லலாம் என்பதும், இப்படிப்பட்ட கொடுமைக்கு ஆதாரமான மதத்தை ஒழிப்பது என்பதானது தீர்மானம் செய்யப்பட்ட மறுநாளே பலன் பார்க்கக்கூடியதா என்பதும் திரு. சட்டர்ஜி அவர்களால் தர்ம சிந்தனையோடு கவனிக்கப்பட வேண்டியதாகும்.
மதமற்றவர்களால் ஏற்பட்ட நன்மைகள் என்ன என்பதைக் கணக்கு பார்க்க இன்னமும் காலம் வரவில்லை என்று தான் சொல்லுகின்றோம். மதத்தின் பேரால் கட்டிப் போடப் பட்டிருக்கும் மக்களுக்குச் சுயஞானம் ஏற்பட்ட பிறகும் மதத்தின்பேரால் பயனடைந்து வருகின்றவர்களுடைய எதிர்ப்புகளைச் சமாளிக்க சவுகரியம் செய்துகொண்ட பிறகும் தான் மதநம்பிக்கை அற்றவர்களின் வேலையைக் கணக்குப் பார்க்க வேண்டும் என்று வணக்கமாய் தெரியப்படுத்திக் கொள்ளுகின்றோம்.
மத நம்பிக்கை அற்றவர்கள் தங்கள் வேலையில் வெற்றி பெறுவார்களா? என்கின்ற விஷயத்தில் நாம் உறுதிகூற துணியவில்லை. ஆனால் நாம் கூறும் மத நம்பிக்கை அற்றால்தான் அதன்பேரால் இழிவு படுத்தப் பட்ட பிரிவுபடுத்தப்பட்ட – சூழ்ச்சி செய்து ஏமாற்றப்பட்ட மக்கள் விடுதலை பெற்று சமத்துவடைந்து உலக சகோதரத்துவம் கொண்டாட முடியும் என்பதில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு இதுவே வைரம் போன்ற நமது உறுதியான எண்ணமாகும் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். தவிர “தென்இந்திய சுயமரியாதைக்காரர்கள் ரஷ்யாவை பார்க்கிறார்கள்” என்று எழுதி இருப்பதைப்பற்றி சுயமாரியாதைக் காரர்கள் அவமான மடையவில்லை. ஏனெனில் ரஷ்யா எவ்வித இழிவான வேலையையும் மகாபாதகமான வேலையையும் செய்வதாக நாம் கருதவில்லை. ஒரு சமயம் ரஷ்யா முட்டாள் தனமான வேலை செய்வதாக வேண்டுமானால் சொல்லிக் கொள்ளட்டும் முட்டாள்தனமான காரியம் சூழ்ச்சியான வேலையை விட கெட்ட காரியமாகி விடாது.
திரு. ராமானந்த சட்டர்ஜீ அவர்கள் தென் இந்தியாவை, தென் இந்தியப்பார்ப்பனரைக் கொண்டும், அவர்களது பத்திரிகையைக் கொண்டும், அவர்களது அரசியல் இயக்கங்களைக் கொண்டும் பார்க்காமல் வாழ்க்கையில் சகல துறைகளிலும் கீழ் ஜாதியார் களாகவும், சூத்திரர்களாகவும், நாஸ்திகர்களாகவும், தேசத்துரோகி களாகவும், பிராமணத்துவேஷிகளாகவும், சர்க்கார் தாசர்களாகவும், பெயர் சூட்டி, ஒதுக்கித் தள்ளி வைத்திருக்கும் மூன்றே முக்கால் கோடி மக்களின் மூலமாக பார்ப்பாரேயானால் ருஷியாவைப் பற்றிய அபிப்பிராயம் அந்த நாட்டுக்குச் சரியென்றோ, தப்பென்றோபட்டாலும் தென் இந்தியாவுக்கு அவசியம் என்று உணருவ தோடு ருஷியாவுக்கு வழிகாட்டக்கூடிய சக்தியைக்கூட பெற்று விடுவார் என்றே கருதுகின்றோம்.
– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 20.09.1931