பெங்களூரு, ஜூன் 17 பெரியார் முகம் பொறித்த தங்கத்தால் செய்யப்பட்ட சமூகநீதி செங்கோலை முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வழங்க தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூகநீதி பேரவை என்ற அமைப்பு திட்டமிட்டுள்ளது.
டில்லியில் அண்மையில் நடந்த புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சைவ மடாதிபதிகள் பிரதமர் மோடியிடம் சோழர்மரபின்படி செங்கோல் அளித்தனர். தங்கத்தால் செய்யப்பட்டிருந்த செங்கோல் முறைப்படி பூஜைசெய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவர் இருக்கைக்கு பின்புறம் வைக்கப்பட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மதுரையை சேர்ந்த சமூகநீதி பேரவை, பெங்களூருவில் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தந்தை பெரியாரின் முகம் பொறித்த சமூகநீதி செங்கோலை அளிக்க திட்டமிட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை சமூகநீதி பேரவைத்தலைவர் மனோகரன், கணேசன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் சித்தராமையாவிடம் அளிக்க இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் சமூகநீதியை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக முதலமைச்சர் சித்தராமையாவிடம் செங்கோல் அளிக்கவிருப்பதாக மனோகரன்
தெரிவித்தார்.