பார்ப்பனர்களின் அடையாளம் சமஸ்கிருதமே!

viduthalai
3 Min Read

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பார்ப்பனரல்லாத பெண் ஒருவர் சமஸ்கிருத இளங்கலைப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்றார். அவரை பேட்டி எடுத்த பார்ப்பன ஊடகவியலாளர் ரஞ்சன் ராஜீ ‘‘தங்கப் பதக்கம் வெல்லும் அளவிற்கு சிறந்த சமஸ்கிருத கல்வி கற்றுள்ளீர்கள். உங்களுக்கு சமஸ்கிருதம் கற்றுக் கொடுத்தவர் யார்?’’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த மாணவி வாரணாசியில் உள்ள மோகன்சராய் பகுதி மசூதியில் பணி புரியும் பர்ஷாத் அலி என்ற இஸ்லாமியர் தனக்கு சமஸ்கிருதப் பயிற்சியாளராக இருந்தார் என்று கூறினார்.

அதன் பிறகு அந்த பார்ப்பன ஊடகவியலாளர் மோகன்சராய்க்குச் சென்று மசூதியில் பணிபுரியும் பர்ஷாத் அலியிடம் பேட்டி எடுத்தார்.

‘‘நீங்கள் சமஸ்கிருதம் யாரிடம் கற்றுகொண்டீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு அவர் ‘‘மங்காரி பகுதியில் உள்ள குஷிராம் தோர் என்ற விவசாயி சமஸ்கிருத வித்வானாக இருந்தார். அவரிடம் கற்றுக்கொண்டேன்’’ என்றார். (தோர் என்பது அரியானா, உத்தரப்பிரதேசம் பகுதிகளில்  நதிக்கரையில் தூண்டில் போட்டு மீன்பிடித்து வாழும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைக் குறிக்கும்)

இந்த நிலையில் கடைசி வரை தங்கப்பதக்கம் வாங்கும் அளவிற்கு சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்கும் திறமை கொண்டு ஒரு பார்ப்பான்கூட அந்தப் பார்ப்பன ஊடகவியலாளருக்குக் கிடைக்கவில்லை. (கீழே படங்களைக் காண்க) இதுதான் அவருக்குள்ள பிரச்சினை!

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் சமஸ்கிருதம் கற்ற இஸ்லாமியர், தனது மாணவிக்கு தங்கப் பதக்கம் வாங்கித்தரும் அளவிற்கு சமஸ்கிருதம் கற்றுக் கொடுத்துள்ளார். பாராட்டுவதற்குப் பதில் பகைக்கிறார்கள். இதற்குப் பெயர்தான் பார்ப்பனீயம் என்பது!

***

2019ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் நியமிக்கப் பட்டதை அடுத்து, அங்கு போராட்டம் வெடித்தது.

பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத வித்யா விக்யான் இலக்கியத் துறையில் முஸ்லிம் ஒருவர் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஆய்வு அறிஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணைவேந்தரின் வீட்டுக்கு அருகில் அவர்கள் அமர்ந்து போராடினர். இசை வாத்தியங்களை வாசிப்பதன் மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்தை ஈர்க்கவும் அவர்கள் முயன்றனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் ராகேஷ் பட்நகருக்கு போராட்டக்காரர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், ”பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவரான மதன் மோகன் மாளவியா, சம்பந்தப்பட்ட இலக்கியத் துறையை பல்கலைக்கழகத்தின் இதயமாகக் குறிப்பிட்டார்.

இந்தப் பல்கலைக்கழகம் கலாச்சாரம், மதம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளுக்குப் பெயர் போனது. இவை அனைத்தையும் நிர்வாகம் அறிந்தும் ஓர் இந்து அல்லாத நபரைப் பணியில் அமர்த்தியிருக்கிறது.

இது நிறுவனத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானது. அதனால் பேராசிரியர் நியமனத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டது.

இதுதொடர்பாக பல்கலைக்கழகச் செய்தித்தொடர்பாளர் ராஜேஷ் சிங் கூறும்போது, ”இலக்கியத் துறையில் நேர்காணலுக்குப் பிறகே பேராசிரியர் நியமனம் செய்யப்பட்டது. யூஜிசி விதிமுறைகள் மற்றும் பல்கலை. விதிகளின்படியே பேராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் மதத்துக்கோ, சமயத்துக்கோ இடமில்லை. தேர்வு செய்யப் பட்டவரின் தகுதியை வைத்து, வெளிப்படைத் தன்மையுடனேயே இதை மேற்கொண்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார். இருப்பினும் தொடர் நெருக்கடி காரணமாக  அந்தப் பேராசிரியர் தன்னுடைய பதவியிலிருந்து விலகி சொந்த ஊரான ராஜஸ்தான் சென்றுவிட்டார்.

இவை எல்லாம் கற்பனையல்ல; நம்முன் நடைபெற்ற அப்பட்டமான நிகழ்ச்சிகள். ‘‘பிறவியில் குற்றம் இருந்தால் ஒழிய, புலி புல்லைத் தின்னாது. பார்ப்பனர்களின் தன்மையும் அதுதான்’’ – இது சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு பார்ப்பன நீதிபதிகளுக்குமுன் தந்தை பெரியார் சொன்ன பொருள் மிகுந்த வாக்கு!

சிந்திப்பீர்! இதுதான் பார்ப்பனீயம்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *