சுயமரியாதைச் சுடரொளிகள்!-தமிழ்க்கோ

viduthalai
4 Min Read

1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.

சிவகங்கை இராமச்சந்திரன்

சுயமரியாதை இயக்கத்தின் தளகர்த்தர்களில் ஒருவரான சிவகங்கை இராமச்சந்திரன் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராக திகழ்ந்தவர். புகழ்பெற்ற வழக்குரைஞரான, இவர் 1884ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தார். திருவனந்தபுரம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். மதுரையிலும், பின்னர் திருச்சியிலும் பயின்று ‘பி.ஏ.’ பட்டம் பெற்றார்.

1913இல் சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டப் படிப்பு முடிந்து வழக்குரைஞர் ஆனார். முதலில் மதுரையில் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார். பின்னர் சொந்த ஊரான சிவ கங்கைக்கு திரும்பி அங்கேயே வழக்குரைஞராக பணியாற்றினார்.

ஜாதி பெயர் துறப்பு

1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாடு சவுந்தரபாண்டியனார் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் இராமச்சந்திரனார் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பெயர்களைச் சூட்டிக் கொள்ளக் கூடாது என்றும், அவ்வாறு ஜாதிப் பெயர்களைச் சேர்த்துக் கொண்டுள்ளவர்கள் அப்பெயர்களை நீக்க வேண்டும் என முன்மொழிந்தார். தனது பெயருக்குப் பின்னால் உள்ள  சேர்வை என்ற பட்டத்தை துறப்பதாக அறிவித்தார். தந்தை பெரியார் அதனை வழிமொழிந்தார். இராமச்சந்திரனாரும், திராவிட இயக்கத்தினரும் ஜாதிப் பெயர்களைத் தூக்கி எறிந்தனர். அதன் விளைவாகத்தான் ஜாதிப் பெயர் இல்லா தமிழ்ப் பெயர்களை காண முடிகிறது.

அதே ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். 1930இல் விருதுநகரில் நடைபெற்ற 3ஆவது சுயமரியாதை மாநாட்டிலும் கலந்து கொண்டு ஜாதி ஒழிப்புக்காக பேருரை ஆற்றினார்.

அமைச்சர் பதவி ஏற்க மறுப்பு

1930ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பொல்லினி முனிசாமி இருந்தார். இவர் இராமச்சந்திரனை தமது அமைச்சரவையில் சேருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் பதவி ஆசையின்றி அமைச்சராகும் வாய்ப்பை ஏற்காமல் மறுத்து விட்டார் இராமச்சந்திரன்.

தந்தை பெரியார் அறிவுரையை ஏற்றுதான் இராமச்சந்திரன் அமைச்சர் பதவியை மறுத்ததாக கூறப்படுவதுண்டு.

தந்தை பெரியார்தம்  கருத்தை யாரிடமும் திணிக்க மாட்டார். அதற்கு முன்பே ஆட்சியில் பொறுப்பேற்க வந்த வாய்ப்புகளை உதறித் தள்ளியவர்தான் அவர்.

1940–1942–களில் இருமுறை ஆட்சியை அமைக்கு மாறு வந்த வாய்ப்பை அடியோடு மறுத்தவர் அவர்.

அய்யாவைப் போல் பதவி ஆசை இல்லாதவராக இராமச்சந்திரன் விளங்கினார். இதற்கு முன்பு மாவட்ட நீதிபதி பதவி இவரைத் தேடி வந்த பொழுதும் மறுத்தார்.

அப்பொழுதே ‘‘நான் பதவிகள் மூலமாக என் மக்களுக்குத் தொண்டு செய்யும் காலம் என்பது, அவர்களிடம் சமத்துவம், சம தருமம், சமூகநீதி சுயமரியாதை, பகுத்தறிவு எல்லாம் அமைந்த பின்னர் தான் வர வேண்டும்; அப்போதுதான்  அவர்களுக்கும் பயன், எனக்கும் பெருமை. அதுவரையில் போராட்டம்தான் எனக்கு வாழ்க்கை’’ என்றார்.

நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்த காலத்தில் குடிநீர் பானைகளிலும் ஜாதி வேறுபாடுகள் காட்டப்பட்டன. அந்த வழக்கத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்றார். இரவு நேரப் பள்ளிகளைத் தொடங்கி உழைக்கும் மக்களுக்கு கல்வியறிவு புகட்டியவர்.

சிவகங்கை மண்ணின் சத்திரம் மாணவர் விடுதியிலும், பிற நகரங்களில் உள்ள மாணவர் விடுதிகளிலும் பார்ப்பன மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். இராமச்சந்திரன் இதை எதிர்த்துப் போராடினார். இதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் சேர்க்கப்பட்டனர்.

அந்த விடுதியில் தங்கிய மாணவர்களுக்கு முடி திருத்துநர்கள் முடி திருத்த மறுத்தனர். இதை அறிந்த இராமச்சந்திரனார் மன்னருக்கும், தமக்கும் முடி திருத்தும் தொழிலாளியை கொண்டே ஆதி திராவிட மாணவர்களுக்கு முடி திருத்தச் செய்தார்.

தாழ்த்தப்பட்டோரும் கோவில்களில் தடையின்றி சென்று வழிபட பாடுபட்டார்.

இரவுப் பள்ளிகளைத் தம் சொந்த செலவில் கட்டி, அவர்களை  கல்வியறிவு பெறச் செய்தார்.

ஆதி திராவிட மாநாடு நடத்தி தன் ஜாதி மக்களின் வெறுப்புக்கு ஆளாகி அவர்களால் கல்லெறியப்பட்டு காயம் அடைந்தார்.

சுயமரியாதைச் சுடரொளியான சிவகங்கை இராமச்சந்திரனை எப்படியேனும் காங்கிரசுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென மதுரை வைத்தியநாதன் இவரை அணுகினார். அப்போது இராமச்சந்திரன்  ‘‘மனிதருள் ஏற்றத் தாழ்வுகளைப் பிரதிபலிக்கும்  சின்னமான பூணூலைத் தாங்கள் அகற்றினால் நாங்கள் சேருகிறோம்’’ என்று முகத்தில் அறைந்தாற் போல் கூறி விட்டார். அந்த சுயமரியாதைச் சுடரொளியின் கொள்கையின் உறுதிக்கு இதைவிட வேறு சான்றும் வேண்டுமோ?

சிந்தை, உயிர் மூச்செல்லாம் இயக்கமாகவே வாழ்ந்த இராமச்சந்திரன் எதிர்பாராத வகையில் 26.2.1933 அன்று இறுதியெய்தி விட்டார்.

உறுதியான உள்ளம்

செய்தி அறிந்து அய்யா அவர்கள் பெரும் துயரில் ஆழ்ந்தார். தம் இரங்கல் செய்தியில் தோழர் இராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும் மனதில் உள்ளதை எவ்வித தாட்சண்யத்திற்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது மிக, மிக அரிதேயாகும் எனக் குறிப்பிட்டார்.

சிவகங்கை இராமச்சந்திரனின் சமூகசேவையை கவுரவிக்கும் வகையில் சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *