நாக்பூர், ஜூன் 30- நீதித்துறையின் செயல்பாடுகள், நீதித்துறை பயங்கரவாதமாக மாறிவிடக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ஜனநாயகத் தின் மூன்று முக்கியத் தூண் களான நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித் துறை ஆகியவற்றுக்கு அரசமைப்புச் சட் டம் தனித்தனி அதிகாரங் களையும், வரம்புகளையும் வழங்கியுள்ளது. இந்த மூன்று அங்கங்களும் தங்களுக்குள் உள்ள எல்லைகளை மதித்துச் செயல்பட வேண்டும் என்பதை இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த மாத தொடக்கத்தில், ஆக்ஸ்போர்டு யூனியனில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய போதும், நீதித்துறை தனது வரம்புகளை மீறிச் செயல்படக் கூடாது என்ற கருத்தை அவர் முன் வைத்திருந்தார்.
இந்நிலையில், நாக்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘நாடாளுமன்றமும், நிர்வாகமும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறும்போது, நீதித்துறை தலையிட வேண்டியது அவசியமாகிறது.
நீதித்துறையின் இத்தகைய செயல்பாடு நாட்டுக்குத் தேவைதான். ஆனால், அந்தச் செயல் பாடு ஒருபோதும் நீதித்துறையின் வரம்பு மீறலாகவோ அல்லது நீதித்துறை பயங்கரவாதமாகவோ மாறிவிடக் கூடாது. மற்ற இரு தூண்களின் செயல்பாடுகளில் நீதித் துறை தேவையின்றித் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த தேசம் அம்பேத்கரின் பங்களிப்பிற்காக அவருக்கு என்றென்றும் நன்றியுள்ளதாக இருக்க வேண்டும்’ என்று குறிப் பிட்டார்.