நெஞ்சு பொறுக்குதில்லையே!

Viduthalai
3 Min Read

உயர்ஜாதியினர் – பணக்காரர்கள்

 வயிற்றில் அறுத்துக் கட்டத்தான் ‘நீட்’ தேர்வா?

 சமூகநீதியாளர்களே ஒன்றிணைந்து போராடுவோம் வாரீர்!

அரசியல்

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான ‘நீட்’ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளிவந் துள்ளது. ‘நீட்’ தேர்வு என்பது உயர்ஜாதியினருக்கும், நகர்ப்புறத்தாருக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் பயனளிக்கும் சூழ்ச்சியும், வஞ்சினமும் கொண்ட ஏற்பாடு என்று தொடர்ந்து நாம் கூறி வந்தது – போராடி வந்தது 100 விழுக்காடு உண்மை என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் மசோதா குடியரசுத் தலைவர் மாளிகையில் தூங்குகிறது. சமூகஅநீதிக்குச் சாவு மணி அடிக்க அனைத்து சமூகநீதி சக்திகளும் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

2023 ஆம் ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் 37 பேர் ‘நீட்’ பயிற்சி மய்யங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலா னோர் பொருளாதார ரீதியில் முன்னேறிய குடும்பங் களைச் சார்ந்தவர்களாக இருப்பதால், ஏழை மாணவர் களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாகிவிட்டது.

இந்த ஆபத்தினைத் தொடர்ந்து நாம் கூறி வந்திருக் கிறோம் – போராடியும் வந்திருக்கின்றோம்.

சமமற்ற போட்டியை 

அம்பலப்படுத்திய ஆய்வு

2023 ஆம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வில் முதல் 50 இடங்களில் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் இதோ:

2023 ஆம் ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வில், தேசிய அளவில் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பின்னணி குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஆய்வு நடத்தியுள்ளது.

அவர்களில் 38 மாணவர்களின் பள்ளி, கல்வி வாரியம், ‘நீட்’ தேர்வுக்காக பெற்ற பயிற்சி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த 38 மாணவர் களில் 29 பேர் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர் கள்; 5 பேர் ஆந்திர மாநில பாடத் திட்டத்திலும், 3 பேர் மராட்டிய மாநிலப் பாடத் திட்டத்திலும், 2 பேர் மேற்குவங்க மாநிலப் பாடத் திட்டத்திலும் படித்தவர்கள். அதேபோல், விவரங்கள் சேகரிக்கப்பட்ட 38 பேரில், 29 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்த உயர்ஜாதி மாணவர்கள். 7 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளையும், இருவர் பட்டியலினத்தையும் சேர்ந்தவர்கள். சாதனை படைத்த மாணவர்கள் 38 பேரில் 37 பேர் ‘நீட்’ தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஒருவர் மட்டுமே சிறப்புப் பயிற்சி பெறாதவர். ஆனால், அந்த மாணவர் டில்லியின் புகழ்பெற்ற பொதுப்பள்ளியில் படித்தவர். சாதித்ததாகக் கூறப்படும் அனைவருமே டில்லி, புனே, கொல்கத்தா, நாக்பூர், விஜயவாடா, விசாகப் பட்டினம், சென்னை போன்ற பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள். அனைவருமே பொருளாதார அடிப் படையில் வலிமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் மேற்கொண்ட இந்த ஆய்வுகளில் இருந்து, ‘நீட்’ தேர்வு என்பது நகர்ப்புறங்களைச் சேர்ந்த, தனியார் பயிற்சி மய்யங்களில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து படிக்கும் அளவுக்கு வசதி படைத்த குடும்பங்களின் மாணவர் களுக்கு மட்டுமே வாய்ப்பானது என்பது உறுதியாகி உள்ளது. மேலும் மருத்துவப் படிப்பை, ‘நீட்’ தேர்வு ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்கி விட்டது.

மருத்துவக் கல்வி என்பது உயர்ஜாதியினர், பணக் காரர்கள், நகர்ப்புறத்தார் வயிற்றில் அறுத்துக்கட்டத்தான் என்பதும் வெளிப்படையாகிவிட்டது.

அரசு பள்ளிகளில் படித்தவர்கள் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

திராவிடர் கழகம் எதைச் சொல்லி வந்ததோ, அது நடந்தே விட்டது.

பொதுவான ‘நீட்’  இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களையும், கிராமப்புற மாணவர்களையும் பாதிக்கக் கூடியதே!

தமிழ்நாட்டில் நாம் ஏற்படுத்திய விழிப்புணர்வு வேறு மாநிலங்களில் இல்லாமல் இருப்பது ஆதிக்கவாதிகளுக்கு – உயர்ஜாதியினரின் மேலும் முன்னேற்றத்திற்கான வழிகோலும் ஆட்சியாளர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘நீட்’ டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்குக் கோரும் சட்ட முன்வடிவு ஆளுநர் மாளிகையில் குறட்டை விட்டது போதாது என்று, இப்பொழுது குடியரசுத் தலைவர் மாளிகையில் உறங்குகிறது.

இது அரசியல் பிரச்சினையல்ல – பெரும்பாலான மக்களின் ஜீவாதாரமான சமூகநீதிப் பிரச்சினை.

சமூகநீதி சக்திகள் வலுவாக ஒன்றிணைந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு ‘நீட்’ டைக் குழிதோண்டிப் புதைக்க முன்வரவேண்டும். இல்லையெனில் ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவு மண்மூடிப் போய்விடும், எச்சரிக்கை!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

18.6.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *