“நம்ம முறைப்படி அடக்கம் செய்யணும்!”

viduthalai
2 Min Read

இயக்க மகளிர் சந்திப்பிற்காக நாகை மாவட்டம் கொட்டாரக்குடி கிராமத்திற்குச் சென்றிருந்தோம். வீட்டு வாசலில் ஒரு அம்மா கருப்புச் சேலையுடன் அமர்ந்திருந்தார்.

அவர் அருகே ஓர் ஆடும், இரண்டு ஆட்டுக் குட்டிகளும் இருந்தன. அந்த ஆடுகளிடம் பேசிக் கொண்டே, இலைகளை ஊட்டிக் கொண்டிருந்தார். நானும், தோழர் நாத்திக பொன்முடியும் இருசக்கர வாகனத்தில் சென்று இறங்கினோம்.

பார்வையில் சற்றுக் குறைபாடு இருந்தது, நினைவாற்றலையும் பாதி இழந்துள்ளார். எனினும் யாரோ கருப்புச் சட்டையுடன் வருகிறார்கள் என்பதை அறிந்து, வாங்க! வாங்க! எனக் கை கூப்பி வணக்கம் சொன்னார்.

உணர்ச்சிவசப்படுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. அந்த அம்மா மற்றும் ஆட்டுக்குட்டி அருகிலேயே நாமும் அமர்ந்தோம். 45 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். எந்த ஒரு நினைவும் அந்த அம்மாவிற்கு இல்லை.

எனினும் 5 நிமிடத்திற்கு ஒருமுறை “நான் இறந்துவிட்டால், நம் கட்சிக்காரர்கள் அனைவரும் வந்து நம்ம முறைப்படி அடக்கம் செய்யணும்”, என்பதை ஏழெட்டு முறை கூறினார். அதைத் தவிர அந்த முக்கால் மணி நேரப் பேட்டியில் எதுவும் கூறவில்லை.

இனிமேல் அவரைச் சந்தித்தால், அதுவும் கூறமாட்டார். ஆம்! இன்று காலை கொட்டாரக்குடி இலட்சுமி அம்மாள் இறந்துவிட்டார். இயக்க மகளிர் சந்திப்பின் நேர்காணல்கள் “கொள்கை வீராங்கனைகள்” எனும் தலைப்பில் நூலாக வெளிவர இருக்கிறது. அதன் வெளியீட்டு விழா 06.07.2025 அன்று மன்னார்குடியில் நடைபெற இருக்கிறது.

“பேட்டி கொடுத்த மகளிரில் வயதான சிலரும் இருக்கிறார்கள். எனினும் விரைவாக நூலைக் கொண்டு வந்து, அனைவர் கைகளிலும் அதைச் சேர்த்துவிட வேண்டும்”, என ஆசிரியர் அவர்கள் கூறினார்கள்.

இந்நிலையில் “நம்ம முறைப்படி அடக்க செய்ய வேண்டும்” என அடிக்கடி கூறி வந்த இலட்சுமி அம்மாள் உடல்நிலைக் குறைவால் மறைவுற்றார். இறந்த பிறகும் சுயமரியாதை முக்கியம் என எண்ணிய இந்த இயக்கத்தின் இலட்சுமி அம்மாவிற்கு வீர வணக்கம்!

அவரின் ஓர் ஆடும், இரண்டு ஆட்டுக்குட்டிகளும் இனி இலட்சுமி அம்மா இன்றி வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

– வி.சி.வில்வம்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *