பிஜேபி ஆட்சியின் சமூகநீதி யோக்கியதை இதுதான்! இன்னும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை

Viduthalai

புதுடில்லி ஜூன் 29 அரசு வேலை வாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 சதவீத  இடஒதுக்கீடு வழங்குவதை மத்தியப் பிரதேச அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் பாஜக அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது என நிரூபணமாகியுள்ளது என்று  காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இடஒதுக்கீடு பற்றி மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் பெயரளவில் மட்டுமே உள்ளது. இட ஒதுக்கீட்டு உரிமையை  பாஜக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்றும் காங்கிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சத்தீஸ்கர் மேனாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், மத்தியப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் சவுத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி மற்றும் காங்கிரஸ்  இதர பிற்படுத்தப்பட்டோர் துறை தலைவர் அனில் ஜெய்ஹிந்த் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். ‘‘இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் ஏற்படும் தாமதம், மாநில அரசின் இடஒதுக்கீடு எதிர்ப்பு என்பன பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஹரீஷ் சவுத்ரி பேசுகையில், 1994 ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசு இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 14 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதாகவும், பின்னர் 2003 ஆம் ஆண்டில் அதை 27 சதவீதம் ஆக உயர்த்த முன்மொழிந்ததாகவும் கூறினார். ‘‘ஆனால், அதற்குப் பிறகு மாநிலத்தை ஆண்ட பாஜக அரசு இந்த முடிவை ஒருபோதும் அமல்படுத்தவில்லை. 2018 டிசம்பரில் கமல்நாத் அரசு அமைந்தபோது, 2019 ஆம் ஆண்டில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க  அரசாணை கொண்டுவரப்பட்டது. பாஜக அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை அடுத்து, நீதிமன்றம்  சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி நாங்கள் சட்டப் பேரவையில் மசோதாவை நிறைவேற்றினோம்.  ஆனால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை” என்று  சவுத்ரி கூறினார். 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் விவகாரம்

சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசு 2022 டிசம்பரில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. ஆனால், இந்த மசோதாவுக்கு இதுவரை ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று சத்தீஸ்கர் மேனாள் முதலமைச்சர் பாகேல் தெரிவித்தார். “நாங்கள் சட்டரீதியாக மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் இதை எடுத்துச் சென்று பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்” என்றும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, தான்  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு, அந்தச் சமூகத்திற்கு உரியதை வழங்கவில்லை என்று  பட்வாரி விமர்சித்தார்.  “மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜகவின்  பிற்படுத்தப்பட்ட முதலமைச்சர்கள் அனைவரும் தங்கள் சமூகத்திற்குக் துரோகம் இழைத்துள்ளனர்” என்றும் அவர் கூறினார்.

பா.ஜ.க.வின் இரட்டை வேடம்

இடஒதுக்கீட்டைப் பொறுத்த அளவில் தொடக்கம் முதலே பா.ஜ.க. இரட்டை வேடம் போட்டு வருகிறது. மண்டல் கமிஷனை அமல்படுத்த முன்வந்த வி.பி.சிங் அரசைக் கவிழ்த்தது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கல்வித் துறையில் வரும்போது உயர்ஜாதி மாணவர்களைத் தூண்டி விட்டது. ஆனால் பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு இரண்டே நாட்களில் சட்டம் இயற்றி 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைக்  குறி வைத்து ‘சோஷியல் இன்ஜினியரிங்’ செய்து வாக்கைப் பெறும் பா.ஜ.க. அவர்களுக்குரிய இடஒதுக் கீட்டை மட்டும் வழங்க மறுக்கிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *