அறிவியல் துறையில் புது மாற்றம் இரண்டு ஆண் எலிகளைக் கொண்டு இனப்பெருக்கம் சீனா செய்த புதிய சாதனை!

Viduthalai
2 Min Read

பெய்ஜிங், ஜூன் 29- இரண்டு ஆண் எலிகளை கொண்டு புதியதாக ஒரு எலி குட்டியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர். இதற்கு முன்னர் இதை பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் முயன்று பார்த்திருக்கிறார்கள். ஆனால், குட்டிகள் உருவாக்கப்பட்டாலும் அவை ஆரோக்கியமாக இல்லை. சீன விஞ்ஞானிகள், ஆரோக்கியமான குட்டிகளை உருவாக்கி சாதனை படைத்திருக்கின்றனர்.

சாதனை

இந்த ஆய்வானது “புரொசீடிங்க்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்” (PNAS) என்ற அறிவியல் இதழில் ஜூன் 23, 2025 அன்று வெளியாகியுள்ளது. ஷாங்காய் ஜியா டோங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த சாதனையை செய்து காட்டியிருக்கிறார்கள்.

அதாவது குழந்தை பிறக்க, ஆண் விந்தணுவின் பாதி மரபணுக்களும், ஒரு பெண் முட்டையின் பாதி மரபணுக்களும் சேர வேண்டும். இந்த முட்டை மற்றும் விந்தணுவில் உள்ள மரபணுக்கள் “ஆன்” அல்லது “ஆஃப்” செய்யப்பட்டிருக்கும். அம்மாவிடம் இருந்து வரும் சில மரபணுக்கள் “ஆன்” ஆகவும், அப்பாவிடம் இருந்து வரும் சில மரபணுக்கள் “ஆன்” ஆகவும் இருக்க வேண்டும். இது இயற்கையான விதி.

ஆனால், இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் ஆண் எலியின் உடம்பில் இருந்து விந்தணுவை எடுக்காமல், தோல் செல் போன்ற சாதாரண செல்லை எடுத்திருக்கிறார்கள். இந்த சாதாரண ஆண் செல்லுக்கு, இயல்பாக ஒரு “ஆண்” தன்மை இருக்கும்.

எபிஜெனிடிக் புரோகிராமிங்

விஞ்ஞானிகள், சிறப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த சாதாரண ஆண் செல்லின் மரபணுக்களை “ரீ-புரோகிராம்” செய்திருக்கிறார்கள். அதாவது, ஒரு முட்டை செல்லில் இருப்பது போல.. சில மரபணுக்களை “ஆன்” செய்தும் அல்லது “ஆஃப்” செய்தும், அதன் செயல்பாட்டை மாற்றியிருக்கிறார்கள். இதை செய்யும் சிறப்பு தொழில்நுட்பத்திற்கு பெயர்தான் “எபிஜெனெடிக் புரோகிராமிங்”.

இந்த மாற்றப்பட்ட ஆண் செல், இப்போது ஒரு “முட்டை” போன்ற பங்கைச் செய்ய தயாராக உள்ளது. இறுதியாக, இந்த “மாற்றப்பட்ட ஆண் செல்லை”, இன்னொரு ஆண் எலியின் விந்தணுவோடு சேர்த்து, புதிய குட்டி எலிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

மனிதர்களுக்கு ஒத்து வராது

என்னதான் இரண்டு ஆண் எலியை பயன்படுத்தி குட்டியை வரவழைத்திருந்தாலும், மனிதர்களிடம் இந்த நடைமுறை ஒத்துவராது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, மனித குழந்தை வேண்டும் எனில் நிச்சயம் ஒரு ஆணும், பெண்ணும் சேர வேண்டும். இங்கிலாந்தில் உள்ள செயின்ஸ்பரி வெல்கம் சென்டரை சேர்ந்த கிறிஸ்டோஃப் கலிகெட் கூறுகையில், “இரண்டு ஆண் எலிகளை கொண்டு எலி குட்டிகளை உருவாக்கும் இந்த ஆராய்ச்சி நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான முட்டைகள் தேவை, அதிக எண்ணிக்கையிலான வாடகைத் தாய்மார்கள் தேவை மற்றும் குறைந்த வெற்றி விகிதம் காரணமாக இதை மனிதர்களுக்கு பரிசோதித்து பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *