சென்னை, ஜூன் 28 தமிழ்நாட்டில்1,416 நகர்ப் புறப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பட்டுள்ள நிலையில், அதன் விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் (கிராமப்புறப் பகுதிகள்) பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் 1,416 நகர்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூகநலத்துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் சமூகநல ஆணையரகத்திடம் இருந்து மின்னஞ்சல் மூலமாக காலை உணவுத் திட்டம் தொடர்பாக நகர்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் பெறப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள நகர்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஏதேனும் பள்ளிகள் விடுபட்டிருந்தால் அதை குறிப்பிட்டு கையொப்பத்துடன் உடனடியாக அனுப்ப வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஏதேனும் பள்ளிகள் விடுபட்டது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.